நடிகர் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை!

Published On:

| By christopher

ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் ஓய்வு பெற்றுவரும் நடிகர் மனோபாலாவை நடிகர் சங்க துணை தலைவரும், திமுக தலைமை நிலைய செயலாளருமான பூச்சி முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல அவதாரங்களில் தொடர்ந்து தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் மனோபாலா. இவர் தற்போது நகைச்சுவை நடிகராகவும் கவர்ந்து வருகிறார்.

இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்படும் தளபதி 67 திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒன்றாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன், அதே ஆற்றல் மற்றும் முழு வீச்சில்.. முதல் நாளே.. தூள்..” என பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பின்னர் தனது பதிவை நீக்கிவிட்டார்.

இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையிலேயே ஓய்வு பெற்று வருகிறார்.

இதுகுறித்து அறிந்த நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நடிகர் மனோபாலாவை நலம் விசாரித்தார்.

அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், நடிகர் மனோபாலா விரைவில் குணமடைந்து மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

இங்கிலாந்தில் பட்டப்படிப்பு: இந்திய மாணவர்களுக்கு சிக்கல்?

முஸ்லிம்களை துன்புறுத்துகிறாரா மோடி? – பிபிசி ஆவணப்படம் 2 சொல்வது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel