கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியான மலையாளத் திரைப்படம் மஞ்ஞும்மல் பாய்ஸ். திரையரங்குகளில் வெளிவந்த நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. கேரளாவை தாண்டி இன்றைக்கு தமிழ்நாட்டிலும் அதிக அளவிலான தியேட்டர்களின் ஹவுல்புல் காட்சிகளாக இத்திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 15 நாட்களில் மொத்தம் ரூ.125 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
மேலும் ஒவ்வொரு நாளும் படத்தை பற்றி சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எழுதும் பாசிட்டிவ் கருத்துகளால் வசூலிலும் விமர்சனத்திலும் சக்கைபோடு போட்டு வருகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ்.
இந்த நிலையில் பிரபல எழுத்தாளரான ஜெயமோகன் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் குறித்து எழுதியுள்ள கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொறுக்கிதான் கதைநாயகன்!
படம் குறித்து அவர் கூறுகையில், “யானை டாக்டர் எழுதியவன் என்னும் முறையில் இதை எழுதவேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.
முதல் விஷயம், மலையாள சினிமாவுக்கு நம்மவர் அளிக்கும் புல்லரிப்பு. குறிப்பாக தமிழ் ஹிந்து நாளிதழ் மலையாள சினிமா சார்ந்து 24 மணிநேர புல்லரிப்பு நிலையிலேயே இருக்கிறது. எல்லா படமும் அதன் பார்வையில் கிளாஸிக்தான். அவற்றில் பல படங்கள் பெற்ற அன்னை உட்கார்ந்து பார்க்கமுடியாத சலிப்பூட்டும் போலிப்படைப்புகள்.
மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் இங்குள்ள எளிய விமர்சகர்கூட ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள். அதெப்படி தமிழ் நாளிதழ்களில் செய்திவெளிவந்த அவ்வளவு பெரிய இடர், ஒரு வீர சாதனை கேரளத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் தெரியாமலேயே இருந்தது. மஞ்ஞும்மல் பையன்கள் அதை ஊரில் சொல்லவே இல்லையா? அது ஒருவன் இன்னொருவனுக்காக உயிர்கொடுக்கத் துணிந்த தருணம், அதை அப்படியே மூழ்கடித்து வைத்தார்களா என்ன? நாட்கணக்கில்கூட செய்தி கசியவில்லையா? கிளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக சமையல் செய்து உருவாக்கப்பட்ட காட்சி அது. ஆனால் மல்லுபடம் என்றால் அது ரியலிசம் என்பார்கள் நம்மூர் அரைவேக்காடுகள்.
கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடித்துச் சண்டைபோட்டு, வம்பிழுத்து, வாந்தி எடுத்து, சாமானியர்களை நிலைகுலையச் செய்து கும்மாளமிடுவது என்றே காட்டி வருகிறது. இந்தப் படமும் அந்தப் பொறுக்கிகளை ‘ஜாலியானவர்கள்’ என்று சொல்கிறது. அதற்கான சமூகஏற்பை சினிமா வழியாக மெல்ல மெல்ல உருவாக்குகிறார்கள். அதாவது ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களைக் காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன்.
இந்தப் பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும். அதெல்லாம் உயர்ந்த உணர்வுகள் அல்ல. உண்மையிலேயே இப்படி நடந்து, அதில் ஒருவனுக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதாக படத்தின் இறுதியில் செய்தி காட்டப்படுகிறது. சட்டப்படிச் சிறையில் தள்ளப்பட வேண்டியவன் அவன்” என்று கூறியுள்ளார்.
மேலும் கேரள மாநிலத்தவரையும் பொதுவாக ’பொறுக்கிகள்’ என்று கட்டுரை முழுக்க குறிப்பிட்டு அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரளத்து பொறுக்கிகளிடம் பொது நாகரீகம் கிடையாது!
“மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலாமையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது.
குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும் – இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடல்லூர்- ஊட்டி சாலையிலோ சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள்.
ஆண்டுக்கு இருபது யானைகளாவது இந்த புட்டிகளால் கால் அழுகி இறக்கின்றன. கொதித்துப்போய் நான் அதைக் கண்டித்து எழுதிய யானை டாக்டர் மலையாளத்திலும் பல லட்சம் பிரதி விற்றிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அதை வாசித்திருக்க வாய்ப்பே இல்லை.
இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு ஒரு வார்த்தை இன்னொரு மொழி தெரியாது. எல்லா கேள்விக்கும் மலையாளத்திலேயே பதில் சொல்வார்கள். ஆனால் அவர்கள் மொழி பிறருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்னும் தெனாவெட்டு தெரியும். இந்த படத்தில் தமிழகப் போலீஸ் அவர்களை நடத்தும் விதமும் உண்மையானது. அடி தவிர எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை.
இந்தக் கும்பல் சுற்றுலாத் தலங்களைச் சீரழிப்பது ஒரு பக்கம். ஆனால் அடர்காடுகளுக்குள் அத்து மீறுகிறார்கள். அதற்காக ஊடுவழிகளை எல்லாம் தேர்வு செய்கிறார்கள். எந்த சட்டத்தையும் பொருட்படுத்துவதில்லை. எந்த எச்சரிக்கைகளையும் பேணுவதில்லை. கொய்யாப்பழங்களுக்குள் மிளகாய்ப்பொடி நிறைத்து குரங்குகளுக்கு கொடுக்கிறார்கள். யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள். அடர்காடுகளுக்குள் உச்சத்தில் பாட்டுபோட்டு கூத்தாட்டம் போடுகிறார்கள்.
மே மாதம் மிக ஆபத்தானது. பீடி சிகரெட்டை காய்ந்த தமிழகக் காடுகளுக்குள் வீசிவிட்டுச் செல்வார்கள். பொதுவாகக் கேரளக் காடுகள் காய்வதில்லை. இங்கே அப்படி அல்ல. பல ஏக்கர்கள் எரிந்து அழியும். பல்லாயிரம் உயிர்கள் சாகும். இவர்கள் கவலையே படுவதில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பலரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில் எழுத்தாளர் ஜெயமோகனின் இந்த கட்டுரைக்கு தற்போது சினிமா அரசியல் பிரபலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரே சகதியில் ஊறும் இரண்டு தவளைகள்!
இயக்குநர் நவீன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் பொறுக்கிஸ்’ என்று சொன்ன அந்த சங்கியும், ‘மலயாளப் பொறுக்கிகள்’ என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சகதியில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்!” என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவியை பொறுக்கி என சொல்வாரா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது பதிவில், “இவரை எழுத்தாளர் என சொல்லுகிறார்கள். ஆனால், ஒரு தேசிய இனத்தை அதாவது, மலையாள தேசிய இனத்தவரை பொறுக்கிகள் என சொல்லுகிறார்.
கலை, இலக்கியத்துக்கு மொழி அளவுகோல் இல்லை என இவரே பலமுறை சொல்லி விட்டு, இப்போது மலையாள தேசத்தவர் மீது இப்படி வன்மத்தை கொட்டுவது சரியா? தமிழ்நாட்டை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர் ரவி உள்ளிட்ட இந்து தேசியவாதிகளை பொறுக்கிகள் என சொல்ல துணிச்சல் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோன்று பலரும் ஜெயமோகனின் மஞ்சுமெல் பாய்ஸ் படம் குறித்த அவரது கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா