மலையாளத்தின் உன்னத எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கமல்ஹாசன் உருக்கம்!

Published On:

| By Kumaresan M

மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் நேற்று (டிசம்பர் 25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிறந்தவர் எம்.டி. வாசுதேவன் நாயர். மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமானவர். மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர் என்கிற இயற்பெயரை கொண்ட அவர், கடந்த 1933-ஆம் ஆண்டு பிறந்தார்.

சிறு வயதிலிருந்தே எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர், வேதியியலில் பட்டம் பெற்றார். The Newyork Herald Tribune நடத்திய போட்டியில் மலையாளத்தில் சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான விருதினை தட்டி சென்றார்.

அப்போதுதான் அனைவராலும் கவனிக்கப்பட்டார். பின்னர், மாத்ரூபூமி நாளிதழில் பணிக்கு சேர்ந்தார். அங்கு நன்றாக தன்னை பட்டை தீட்டிக் கொண்டார். 1954 ஆம் ஆண்டு ‘மாத்ருபூமி’யில் வெளிவந்த ‘வளர்த்து மிருகங்களி’ல் (வளர்ப்பு பிராணிகள் ) எம்டியின் எழுத்து வாழ்க்கை தொடங்கியது.

எம்.டி. வாசுதேவன் நாயர் மொத்தம் ஏழு படங்களை இயக்கியுள்ளார். 1965 ஆம் ஆண்டு முதன் முறையாக முறப்பொண்ணு என்ற படத்துக்கு கதை எழுதினார். 54 படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.

அவற்றில், ஒரு வடக்கன் வீர கதா, கடவு, சதயம், பரினயம் ஆகிய நான்கு படங்களுக்கு சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வாசுதேவன் நாயருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவருமான கமலஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம். மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது. கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘மனோரதங்கள்’ வரை அந்த நட்பு தொடர்ந்தது.

மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

எம்.குமரேசன்

சென்னையில் இன்றும் நாளையும் மழை… பிரதீப் ஜான் தகவல்!

சுனாமி நினைவு தினம்… உறவினர்கள் அஞ்சலி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share