முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த பாக்யராஜ்

Published On:

| By Selvam

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல் முராட் சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’.

இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே அட்டு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர். ‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 8) மாலை சென்னையில் உள்ள பிரசாத் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பாம்பூ ட்ரீஸ் ஸ்டுடியோ உருவான கதை!

விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது, “இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. படத்திற்கு பக்க பலமாக இருந்த சக்திவேல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் இருவரும் திடீரென காலமானது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

lock movie audio launch

ஆனால் அவர்களுடைய கனவெல்லாம் இந்தப் படத்தின் மீது தான் இருந்தது. அந்த இருவருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தால் இப்படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அவர்களது விருப்பம் இதுவாகத்தான் இருக்கும். எங்களுடன் இணைந்து ராஜ்குமார் வேலுச்சாமி அவர்கள் பெரும் பக்கபலமாக இருந்து உதவினார்.

அதுமட்டுமல்லாமல் எங்களது சிரமங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இது மாதிரி புதியதாக வருபவர்கள் சிரமப்படக்கூடாது, அவர்களுக்கு நாம் ஒரு தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதன்படி, அண்மையில் நாங்கள் ஒரு ஸ்டுடியோ தொடங்கியிருக்கிறோம். அது தான் பாம்பூ ட்ரீஸ் ஸ்டுடியோ. அது முழுக்க முழுக்க வளரும் கலைஞர்களை உயர்த்தி விடுவதற்காகவும், அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பக் கருவி வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

வசனம் இல்லாமல் காட்சிகள்!

படத்தின் இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசும் போது, “கொரோனா காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்திற்கு, கொரோனாவால் சற்று தேக்க நிலை ஏற்பட்டது .அப்போது இந்தப் படத்திற்காக பணியாற்றும் போது இரவு பகலாக இயக்குநர் பணியாற்றுவார். இவருடைய திரைப்படத்தின் உருவாக்கம் அசல் தன்மையோடு இருக்கும். அதுதான் இவரது பாணியாக இருக்கிறது.

படத்தின் கடைசி 10 -15 நிமிடங்கள் எந்தவித வசனமும் இல்லாமல் காட்சிகள் நகரும். அந்த அளவிற்கு காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பவர் இயக்குநர் ரத்தன் லிங்கா” என்றார்.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்கள்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, “இந்த விழாவில் காவல்துறையினர், நீதி அரசர்கள் ,படத் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பலரும் பங்கெடுத்துள்ளனர்.

இது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் ரத்தன் லிங்கா சாதாரணமாக வந்துவிடவில்லை. குறும்படங்கள் எடுத்துள்ளார். திரைப்படம் இயக்கியுள்ளார். திரைப்படம் தயாரித்துள்ளார். இப்போது ஸ்டுடியோ தொடங்கி உள்ளார். இப்படிப் படிப்படியான முயற்சிகள் மூலம் வளர்ந்து அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

திரைப்படம் என்பது மக்களிடம் சரியான புரிதலை ஏற்படுத்துவது மட்டுமல்ல, விழிப்புணர்வும் ஏற்படுத்தக் கூடியது. விடுதலைப் போராட்ட காலத்திலும் சரி விடுதலைக்குப் பின்பும் சரி மாற்றங்களை மக்களிடம் ஏற்படுத்தியதில் அதன் பங்கு உண்டு.

lock movie audio launch

வீரபாண்டிய கட்டபொம்மன் வந்த பிறகு தான், அந்த வரலாறே நம் மக்களுக்குத் தெரிந்தது. காவல்துறை பற்றி திரைப்படங்களில் இரண்டு விதமாகக் காட்சிப்படுத்துவார்கள். அவர்களை மிகவும் கொடூரமானவர்களாகக் காட்டுவார்கள். அதே நேரம் நல்லவர்கள் சிலரையும் காட்டுவார்கள். இங்கு வந்திருக்கும் பாக்யராஜ் அவர்களுக்கு நானும் ரசிகன் தான்.

ஒரு முறை எங்கள் வீட்டில் இரவு மனைவி சாப்பாடு பரிமாறினார். அப்போது அருகில் இருந்த கொழுந்தியாள் எனக்கு மனைவி முருங்கைக்காய் துண்டுகளைப் போட்ட போது “போடு போடு நல்லா போடு” என்று கூறினார். எனக்கு அப்போது புரியவில்லை. பிறகு ‘முந்தானை முடிச்சு ‘படம் பார்த்த பிறகு தான் அன்று நிறைய போடு என்று சொன்னதன் அர்த்தம் புரிந்தது.

ஸ்டுடியோவில் ஆண்டுக்கு ஐந்து படம் தயாரிக்க இருப்பதாகச் சொன்னார்கள். அதில் வியப்பொன்றும் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்றது தான் பெரிய மகிழ்ச்சி. நான் காவிரி பாயும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன். டெல்டா மாவட்டத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

எங்கள் மண், மலைகள் இல்லாத சமவெளிப் பகுதியைக் கொண்டது. அங்கு நீர் பள்ளத்தை நோக்கிப் பாயக் கூடியது. தண்ணீர் என்றதும் இப்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு வளமான மண் கொண்ட கிராமம் இருந்தது. பாடுபடுவதற்கு மக்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் அங்கு நீர் இல்லை. அந்தக் கிராமத்தின் அருகே ஒரு ஆறு இருந்தது. அதில் நிறைய நீர் போய்க் கொண்டிருந்தது .

ஆனால் அதன் இடையே ஒரு மலை இருந்தது. அந்த மலை உடைந்தால் அல்லது அகற்றினால் தான் அங்கு நீர்ப்பாசனம் கிடைக்கும். அந்த ஆற்றின் நீர் வரத்தைத் தடுக்கும் அந்த மலையை உடைத்தால் தான் அந்த ஊர் செழிக்கும் என்பதால் ஒரே ஒருவர் மட்டும் ஒரு உளியும் சுத்தியலும் எடுத்துக்கொண்டு போய் தினமும் அந்த மலையை உடைப்பார். எல்லோரும் அவரை வேடிக்கையாகப் பார்ப்பார்கள். இது நடக்கிற காரியமா? என்பார்கள்.

என்னால் முடிந்த வரை செய்வேன். அதற்குப் பிறகு என் மகன் செய்வான். அவனால் முடியவில்லை என்றால் என் பேரன் செய்வான் என்றார். அவரது முயற்சியைப் பார்த்து தேவதைகள் வந்து அந்த மலையை அகற்றி அந்த ஆற்றின் நீரைப் பாசனத்திற்குத் திருப்பி விட்டதாக ஒரு கதை.

அது கதை இல்லை, ஒரு கவிதை. அந்த கவிதையை மாவோ எழுதினார். அதைத் தான் நான் கதையாகச் சொன்னேன். முயற்சிக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும் என்பது இதன் கருத்து. அது போல் இந்தப் பட முயற்சி வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

lock movie audio launch

முருங்கைக்காய் காட்சியின் ரகசியம்!

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும் போது , “படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும் போது பல்வேறு சிரமங்களை சந்தித்து தான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டு தான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும்.

எவ்வளவு முயன்றாலும் வர வேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டி விட்டு திருடப்போவார்கள். ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படிப் பல நாள் எதுவும் கிடைக்கவில்லை.

ஒரு நாள் விநாயகரை வேண்டும் போது இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் ஒன்றுமே கிடைக்காது போகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள்.

ஆனால் மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்த கல்லைத் தூக்கி கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான்.

அப்போது அவன் எதிரே விநாயகர் தலையில் ரத்தத்தோடு வந்து நின்றார். நான் எதுவுமே செய்யவில்லையே… கல்லை கோயிலைத்தாண்டித் தானே வீசினேன்? எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா ? என்றான். அதற்கு விநாயகர், நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று தான் நான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார். அதுபோல இடையூறுகள் வருவது என்றால் எப்படியென்றாலும் வந்தே தீரும்.

இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால், எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கைக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார்.

இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்கு மேல் வேண்டாம் என்பார். எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார்.

அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோது தான், அதன் அர்த்தம் புரிந்தது. விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

எம்ஜிஆரை வியக்கவைத்த காட்சி!

நான் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் கம்பைச் சுற்றி பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கோபியில், 30 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு தான் நடித்தேன். அப்போது நான் ஒரு கையால் சுற்றி விளையாடுவது போல் இருக்கும். இரண்டு கையாலும் சுற்றிப் பிடிப்பது போல் பயிற்சி பெற வேண்டும் என்று அழகிரிசாமி மாஸ்டரிடம் கேட்டேன். அது முடியாது கஷ்டம் என்றார். அதன் நுட்பத்தைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன். அவருக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் நான் கற்றுக் கொண்டதைப் படத்தில் வைத்தேன். மிகவும் சிரமப்பட்டுக் கற்றுக்கொண்டு படத்தில் கம்பு சுற்றியிருப்பேன்.

படத்தை பார்த்து எம்ஜிஆர் எத்தனை வருடமாக இதற்குப் பயிற்சி எடுத்தாய் என்று கேட்டார். நான் விசயத்தை சொன்னபோது அவர் நம்பவே இல்லை. பொய் சொல்லாதே என்றார். அப்போது நான் சொன்னேன் மனது வைத்தால் எதுவும் முடியும் என்றேன். இங்கே காவல்துறையைச் சேர்ந்த இளங்கோவன் தன் மகனை நடிக்க வைத்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஏனென்றால் எங்கள் காலத்தில் நான் நாடகம் பார்க்கப் போகிறேன் என்றாலே வீட்டில் பெல்ட் அடி விழும். சத்யராஜ் மகன் சிபிராஜும் சரி என் மகன் சாந்தனுவும் சரி சினிமா கனவுடன் இருந்ததால், படிப்பில் பெரிதாக வர முடியவில்லை. அதனால் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். அவர்கள் மனதில் உள்ள கனவை நிறைவேற்றவே பெரிதும் விரும்பினார்கள். எனவே மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.” என்றார்.

இராமானுஜம்

“ஆளுநர் செயல் அநாகரீகத்தின் உச்சம்”- தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!

“மரபை மீறிவிட்டார் முதல்வர்”: எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share