நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று(மார்ச் 21) உயிரிழந்தார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அசத்தப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா.
தனது தனித்துவ உடல்மொழியுடன் சிவாஜி கணேசன், கவுண்டமணி, ஜனகராஜ் ராதாரவி போன்ற நடிகர்களை போல மிமிக்ரி செய்து ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.
பின்னர் மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னரானார்.
சின்னத்திரையில் தனது அபார திறமையால் வலம் வந்த கோவை குணாவுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு என்பது குதிரைக்கொம்பாகவே இருந்தது. அவர் ‘சென்னை காதல்’ போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இதற்கிடையே உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவை குணா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உயிரிழந்த செய்தி கேட்டு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில், பிரபலங்களும் ரசிகர்களும் கோவை குணாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக தமிழ்சினிமாவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர்களான விவேக், மயில்சாமி, முத்துகாளை, சிவநாராயண மூர்த்தி, வடிவேல் பாலாஜி, டிபி கஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உயிரிழப்பு தமிழ் சினிமா ரசிகர்களை வேதனைப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது கோவை குணாவின் உயிரிழப்பு ரசிகர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆளுநருக்கு எதிராக மத்திய அமைச்சரை பேசவைத்த தமிழக எம்.பி.!
பெண்களுக்கு மதிப்பில்லை: அதிமுகவில் இணைந்த பாஜக பெண் நிர்வாகிகள்!