1020 தியேட்டர்களில் ‘கொலை’ படம் வெளியாகிறது!

Published On:

| By Kavi

kolai vijay antony movie

விஜய் ஆண்டனியின் ‘கொலை’ திரைப்படம் 1020 தியேட்டர்களில் நாளை (ஜூலை 21) வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாத நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை எட்டுவது இனிமேல் எட்டாக்கனிதான் என்ற சூழல் நிலவி வந்த காலத்தில் 2012 ஆம் ஆண்டு  ‘நான்’ என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய்ஆண்டனி.

சென்டிமென்ட், சகுனங்கள் என புரையோடிப்போன தமிழ் சினிமாவில்  பெயர் வைப்பதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி தயாரிப்பாளராக, நடிகராக, இசையமைப்பாளராக, இயக்குநராக வெற்றிகண்டவர் விஜய்ஆண்டனி.

பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், திமிரு புடிச்சவன், எமன், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான் என எதிர்மறையான பெயர்களை தனது படத்துக்கு சூட்டினார்.

இவரது நடிப்பில் மே 19 அன்று வெளியான பிச்சைகாரன் – 2 தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் குறுகிய நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்தது.

இதன்மூலம் தென்னிந்திய சினிமாவில் 100 கோடி ரூபாய் வியாபார நடிகராக வளர்ந்திருக்கும் நட்சத்திர நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் படம்  ‘கொலை’.

க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘விடியும் முன்’ படத்தின் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார்.

அவருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி  நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர்.

பாலாஜி  குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா வாழ்க்கையில ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள்.

அதுபோன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன். அதுமட்டுமின்றி, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது” என்றார்.

தனது சக நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விஜய் ஆண்டனி மேலும் கூறுகையில், “இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகத் திறமையானவர்கள். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த நடிகை ரித்திகா சிங், அடுத்தடுத்த தனது படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்தப் படம் வெளியான பிறகு மீனாட்சி சவுத்ரிக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர் என அனைவரும் ‘கொலை’யை தங்களது நடிப்பால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்” என கூறினார்.

‘கொலை’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா? என்ற கேள்விக்கு, “’கொலை’யின் உலகம் இன்னும் பல பாகங்களுடன் விரிவடைவதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன். எங்கள் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்து வரும் காலத்தில் அறிவிப்போம்”  என்றார்.

’கொலை’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தமிழ்நாடு முழுவதும் 300 திரைகளில் வெளியிடுகிறது. தமிழ்நாட்டை போன்றே தெலுங்கில் விஜய்ஆண்டனிக்கு ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. பிச்சைக்காரன், பிச்சைக்காரன் – 2 தமிழ்நாட்டுக்கு இணையாக பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

அதனால் கொலை படம்  300க்கும் மேற்பட்ட திரைகளில் ஆந்திரா – தெலங்கானா மாநிலத்தில் வெளியாகிறது.
கர்நாடகா மாநிலத்தில்75 திரைகளிலும் கேரள மாநிலத்தில் – 60 திரைகளிலும் வட இந்திய மாநிலங்களில் – 35 திரைகளிலும் வெளிநாடுகளில் – 250 திரைகளும் ஆக மொத்தம் 1020 திரைகளில் உலகம் முழுவதும் கொலை படம் வெளியாகிறது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share