“ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நாயகர்கள் நடித்த படங்களை தயாரித்த கவிதாலயா நிறுவனம், பாலசந்தர் அவர்களால் தொடங்கப்பட்டது.
இந்த தயாரிப்பு நிறுவனம் அவரது மறைவுக்கு பின் சொல்லிக் கொள்ளும்படியான புதிய படங்களை தயாரிக்கவில்லை.
தற்போது முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டாருடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாகவும், அனஸ்வரா ராஜன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

மேலும் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோ நாராயணன், மயில்சாமி, முத்துக்காளை, சௌந்தர், பேபி மேக்னா சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
‘ஹிருதயம்’ உள்ளிட்ட பல மலையாள வெற்றிப் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, யு.கே.வசந்தகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார்.
இப்படத்தை ‘நாளை’, ‘சக்கர வியூகம்’ படங்களை இயக்கிய உதய் மகேஷ் கதை – திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை – திரைக்கதையில் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘சாந்தி நிலையம்’ தொடர் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், அவரின் 6 வயதான அக்கா மகளுக்கும் இடையில் நடைபெறும் பாச உணர்வினை அழகிய குடும்ப பின்னணியில் விவரித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக படம் உருவாகிறது.
பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு 8.11.2022 அன்று சென்னையில் துவங்கியது.
அம்பலவாணன்