உதயசங்கரன் பாடகலிங்கம்
மனதைத் தொடுகிறதா? kadhalika neramillai review
இயக்குனர் ஸ்ரீதர் தந்த முழுமையான நகைச்சுவை சித்திரங்களில் மிகச்சிறப்பானது ‘காதலிக்க நேரமில்லை’. ‘கதையே இல்லாம ஒரு படம்’ என்ற வகையறாவைச் செம்மையான முறையில் திரையில் கையாண்டவர். அந்த ‘கிளாசிக்’கின் பெயரைத் தாங்கிய படம் என்ற வகையில் முதலில் நம் கவனத்தை ஈர்த்தது, கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’. ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள படமிது. அவர் தனது பெயரை ரவி மோகன் என்றே அழைக்க வேண்டுமென்று கூறியிருப்பதால், அவ்வாறு சொல்வதே சரியாக இருக்கும். kadhalika neramillai review
இதில் அவருடன் நித்யா மேனன், டி.ஜே.பானு, வினய், யோகிபாபு, ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ, வினோதினி வைத்தியநாதன், ரோகான் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார்.
‘காதலிக்க நேரமில்லை’ ஒரு ரொமான்ஸ் ட்ராமா அல்லது காமெடி படம் என்று சொன்னது ட்ரெய்லர். படமும் அப்படித்தான் இருக்கிறதா?

கா.நே. கதை! kadhalika neramillai review
ஸ்ரேயா (நித்யா மேனன்) கரண் (ஜான் கொக்கன்) என்பவரைக் காதலிக்கிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமணத்திற்கு முன்னதாகத் தனது காதலருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதை அறிகிறார். அந்த திருமணத்தை நிறுத்துகிறார்.
அதற்கு முன்னதாகவே இருவரும் பதிவுத் திருமணம் செய்த காரணத்தால், கரணை அழைத்து கொண்டு ஒரு விந்து வங்கிக்குச் செல்கிறார். கணவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி விந்து தானம் மூலம் ஒரு குழந்தையைப் பெறத் தயாராகிறார்.
இந்தக் கதை சென்னையில் நடக்கிறது.
அந்த காலகட்டத்தில், பெங்களூருவில் சித்தார்த் (ரவி மோகன்) நிரூபமா (டி.ஜே.பானு) எனும் பெண்ணைக் காதலித்து வருகிறார்.
திருமணம், குழந்தைப்பேறு போன்றவற்றில் நம்பிக்கையில்லாதவர் சித்தார்த். அதனாலேயே, ’அவரைத் திருமணம் செய்ய வேண்டுமா’ என்ற கேள்விக்குப் பதில் தெரியாமல் தடுமாறுகிறார் நிருபமா.
நிச்சயதார்த்தம் அன்று, அவ்விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லாமல் தவிர்க்கிறார். அதன்பின், மாடலிங் வாய்ப்புக்காக பிரான்ஸ் சென்றுவிடுகிறார்.
காதலியின் புறக்கணிப்பைத் தாங்க முடியாமல் தன்னிஷ்டம் போல வாழ ஆரம்பிக்கிறார் சித்தார்த்.
அந்த நிலையில், ஒரு கண்காட்சியில் பங்கேற்க வந்திருக்கும் ஸ்ரேயாவைக் காண்கிறார். காதல் கொள்கிறார்.
அதனை ஸ்ரேயாவும் உணர்கிறார். ஆனால், அவரால் சித்தார்த்தை ஏற்க முடிவதில்லை. காரணம், விந்து வங்கியின் மூலம் தாயான அவர், தன் குழந்தையின் தந்தை யார் என்று அறியவே பெங்களூரு சென்றிருக்கிறார்.
இந்த விஷயம் எதுவுமே சித்தார்த்துக்குத் தெரியாது.

எட்டு ஆண்டுகள் கழித்து, மீண்டும் சென்னையில் சித்தார்த்தும் ஸ்ரேயாவும் தற்செயலாகச் சந்திக்கின்றனர். அப்போது, ஸ்ரேயாவுக்கு பார்த்திவ் (ரோகான் சிங்) என்ற மகன் இருக்கிறார்.
‘என் அப்பா யாரு, எங்க இருக்காரு’ என்கிற கேள்வியே பார்த்திவ் மனதில் நிறைந்திருக்கிறது.
இந்த நிலையில், அதனை மறக்கச் செய்யும்விதமாக அக்குழந்தையின் வாழ்வில் சித்தார்த் நுழைகிறார்.
அதேநேரத்தில், சித்தார்த்தின் வாழ்வில் மீண்டும் நிரூபமா நுழைகிறார்.
அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘காதலிக்க நேரமில்லை’யின் மீதி.
கதையை மேலோட்டமாக அறியும் எவரும், ‘இது ஒரு அப்பர் மிடில் கிளாஸ் லவ் ஸ்டோரி’ என்று சொல்லிவிடுவார்கள். அதற்கேற்பவே, இதனைக் காட்சியாக்கம் செய்திருக்கிறார் கிருத்திகா.
பீல்குட் படம்!? kadhalika neramillai review

நடிப்பைப் பொறுத்தவரை ரவி மோகன், நித்யா மேனன் இருவருமே அற்புதமான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர். குளோஸ் அப் ஷாட்களில் நுணுக்கமான பாவனை மாற்றங்களைக் காண்பித்திருக்கின்றனர்.
படம் பார்ப்பவர்களில் பலர், ‘நித்யாதான் டாப்’ என்று சொல்லக் கூடும். அதனை மீறித் தனக்கான இடத்தை மிகச்சரியாகப் பயன்படுத்திய வகையில் கவர்கிறார் ரவி.
யோகிபாபு, வினய் ராய் இருவரும் சில காட்சிகளில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகின்றனர்.
ஜான் கொக்கன், லால், லட்சுமி ராமகிருஷ்ணன், மனோ, வினோதினி வைத்தியநாதன் வருமிடங்கள், ‘ஏற்கனவே பார்த்தமாதிரி இல்லையே’ என்று சொல்லும் வகையில் இருக்கின்றன.
ஆனால், இப்படியொரு படத்தில் உருவக்கேலி செய்யும் வகையில், ‘யாரு அத துடைப்பக்குச்சியா’ என்பது போன்ற வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.
அந்த கமெண்டுக்கு உரிய நபராக, இதில் நிரூபமா எனும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் டி.ஜே.பானு. அவரது வெளிறிய முகமும் மெலிந்த உடலும் ‘ஷோபா போன்றதொரு நடிகையோ இவர்’ என்ற கேள்வியை எழுப்புகின்றன. வரும் காலங்களில் நல்ல வாய்ப்புகள் மூலம் அவர் அதற்குப் பதில் சொல்லக்கூடும்.
நித்யாவின் மகனாக வரும் ரோகான் சிங், சட்டென்று நம் மனம் கவர்கிறார். அவரது உருவம் சட்டென்று ஈர்க்காவிட்டாலும், அவரது நடிப்பு அதனைச் சாதித்துவிடுகிறது. கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு, வண்ணமயமான புகைப்படங்களை புரொஜெக்டரில் ஓட விட்டிருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. திரைக்கதை ட்ரீட்மெண்டுக்கு ஏற்ப, ‘ஒரு பீல்குட் படம்’ பார்க்கும் உணர்வை உருவாக்குகிறது.
தயாரிப்பு வடிவமைப்பாளர் லதா, கலை இயக்குனர் சண்முகராஜாவின் பங்களிப்பு, கண்களை உறுத்தாத வகையில் வண்ணமயமான பின்னணி திரையில் இடம்பெற வகை செய்திருக்கிறது.
லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு, காட்சிகளைச் சீராக அடுக்கி கதையைத் திரையில் விரியச் செய்திருக்கிறது.
இது போக நடனம் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, டிஐ, விஎஃப்எக்ஸ் என்று பல விஷயங்கள் இதில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, டப்பிங் பிசிறுகள் இன்றி அமைந்திருப்பது சிறப்பு.
இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். 2கே கிட்ஸ்களுக்கும் பிடிக்கும் வகையில் அவர் ஒரு ரொமான்ஸ் படத்திற்கு இசையமைத்திருப்பது சிறப்பு. ‘என்னை இழு இழு.. இழுக்குதடி’ பாடல் இப்படத்தின் விசிட்டிங் கார்டு. இது போக ‘பேபி சிகி சிகி’, ‘லாவண்டர் நிறமே’ பாடல்கள் இருக்கின்றன. kadhalika neramillai review
பிறந்தநாள் காட்சியில் சூப்பர்மேன் உடையணிந்த ரோகனைத் தூக்கிக்கொண்டு ரவி நடந்து வரும் காட்சியில், அவர் தந்திருக்கும் பின்னணி இசை அருமை. கிருத்திகா உதயநிதியின் கதை, திரைக்கதை, வசனம் நமக்குப் புதிய கதாபாத்திரங்களை, களங்களை நமக்குக் காட்டுகிறது.
விந்து தானம், விந்து சேமிப்பு, குழந்தைப்பேற்றில் விருப்பமின்மை, கமிட்மெண்ட்கள் இல்லா கல்யாண வாழ்வு என்று சமகால வாழ்வில் மிகச்சிலர் மட்டுமே அறிந்த சில விஷயங்களை இதில் நம் பார்வைக்கு முன்வைத்திருக்கிறார். kadhalika neramillai review
அதனால், இப்படத்தில் வரும் காதல், நகைச்சுவை போன்ற அடிப்படை உணர்வுகள் கூட நம் மனதைத் தொடுவதில் தயக்கம் காட்டுகின்றன. ஒரு வெளிநாட்டுப் படத்தைத் தமிழில் படமாக்கிய எண்ணத்தை நம்முள் நிறைகிறது ‘காதலிக்க நேரமில்லை’. கதை மட்டுமல்லாமல், இதன் திரைக்கதை ட்ரீட்மெண்டும் அதற்குக் காரணமாக இருக்கிறது. kadhalika neramillai review

அதேநேரத்தில், இப்படத்தின் முடிவு ‘திறந்த கதவாக’ இருப்பது நம்மை ஈர்க்கிறது.
இது ஒரு தாமதமான விமர்சனம் தான். ஆனால், அடுத்தடுத்த தலைமுறைகளும் பாராட்ட வேண்டுமென்கிற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படம். அதனால், அடுத்த சில நாட்களில் ஓடிடி வெளியீட்டின்போதும் கூட இதன் விமர்சனங்கள் நிறையவே வரக்கூடும்.
நிறைகள், குறைகள் அனைத்தையும் தாண்டி, ‘படக்குழு சீரிய முறையில் உழைப்பைக் கொட்டியிருக்கிறதா’ என்றால், ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். அதனைச் சரியாக ஒருங்கிணைத்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி. kadhalika neramillai review
இன்னும் சில ஆண்டுகள் கழித்து, ‘காதலிக்க நேரமில்லை எனக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் சொல்லும் வகையில் இப்படத்தைத் தந்திருக்கிறார். இப்போதே அதனைச் சொல்லத் தயார் என்றால், உங்களுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…