நவம்பர் 4 ஆம் தேதி வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்துள்ளார்.
நவம்பர் 4 ஆம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், “நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன், நீங்கள் என் மீது காட்டும் அன்பு மிகப்பெரியது” என்று இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (நவம்பர் 8 ) வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும் காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும் நள்ளிரவு காட்சிகளும் தியேட்டர் ஆக்கிரமிப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று (நவம்பர் 7) திங்கட்கிழமை. ஆனாலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆவதையும் குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன்.
தமிழ்நாட்டிற்கு வெளியில் இதே நிலை இருக்கிறது (பெங்களூரு, கேரளா, மலேசியா). நான் நட்சத்திரம் இல்லை; உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி ” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அதுவே, எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமே எனக்கு பெரிய சந்தோஷம். அதுவே நான் விரும்பியது, தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி.
நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும், மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்