பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டாம் என சுபாஷ்கரனிடம் தான் கூறியதாகவும் அதையும் மீறி படத்தை எடுத்து வெற்றிப்படமாக்கிவிட்டார் எனவும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
நேற்று (மார்ச் 29) மாலை சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் – 2 இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட துரைமுருகன் பேசுகையில்,
‘ஒரு வரலாற்று கதையை வரலாற்றில் நிற்கும் அளவில் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. நான் கல்லூரி படிக்கின்ற காலத்தில் பலமுறை பொன்னியின் செல்வன் படித்திருக்கிறேன்.
இந்த நாவலை படமாக்குவதாக சுபாஷ்கரன் என்னிடம் கூறினார். இயக்குனர் யார் என்று கேட்டேன். மணிரத்னம் என்று சொன்னார். தப்பா எடுத்துக்காதீங்க.. மணிரத்னம் இந்த வரலாற்று கதைக்கு ஒத்துவர மாட்டார் என்றேன். அவர் இருட்டிலேயே படம் எடுப்பவர். அவர் வேண்டாம் என்றேன்.
ஆனால் பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்துவிட்டு பிரம்மித்துப் போய் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டுவிட்டேன். படம் பார்த்ததும் உடனடியாக வீட்டில் இருந்தே சல்யூட் அடித்தேன். வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார்.
எனது தொகுதிக்குட்பட்ட ‘திருவலம்’ என்ற ஊர்தான் வந்தியத்தேவனின் ஊர். அதனால் அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி.’ என்றார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், ‘கமல்ஹாசனுக்கு கலைஞர் கருணாநிதி கலைஞானி என பெயரிட்டார். அவருக்கு இணையானவர் திரையுலகில் இன்றைக்கு எவரும் இல்லை. இனிமேலும் இல்லை. எனது பேச்சைக் கேட்காமல் இப்படத்தை எடுத்து வெற்றி கண்ட சுபாஷ்கரனுக்கு வாழ்த்துகள்.
ஒரு படத்தின் மூலம் ஒரு தமிழ் மன்னனை அறிமுகப்படுத்திய பெருமை சுபாஷ்கரனை சேரும். முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இரண்டு மடங்கு ஓடும்’ என கூறினார்.
இராமானுஜம்