நடிகர் அஜித் குமாருக்கு நேற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது உடல்நலத்துடன் இருப்பதாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
தனது மகன் ஆத்விக் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிலையில், நடிகர் அஜித்குமார் நேற்று சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், சமூகவலைதளங்களில் அஜித்தின் உடல்நலம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.
மேலும் அஜித் குமாருக்கு மூளைப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ நடிகர் அஜித்திற்கு மூளைக் கட்டிக்கு அறுவை சிகிச்சை தொடர்பாக வெளியான செய்திகள் உண்மையல்ல.
வழக்கமான உடல்நலப் பரிசோதனையின்போது அவரது காதுக்கும் மூளைக்கும் இடையே நரம்பில் சிறிய கட்டி (வீக்கம்) இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அரை மணி நேரத்தில் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
அஜித் தற்போது நலமுடன் இருக்கிறார். தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா