இந்திய சினிமாவில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட சினிமாக்கள் பிரதானமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் எப்போதும் பெரும் பகுதியை கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தி சினிமா இந்த வருடம் பின்னுக்கு தள்ளப்பட்டு தமிழ், தெலுங்கு கன்னட மொழி படங்களின் வசூல் பெரும் பங்கு வகிக்கிறது.
கதாநாயகர்களின் பிம்பத்தை முன்னிறுத்தி கல்லாகட்டும் பிராந்திய மொழிப்படங்கள் இந்த வருடம் இந்தியா முழுவதும் வணிக ரீதியாக வெற்றிபெற காரணம், மல்டி ஸ்டார்கள் நடித்த ஆர்ஆர்ஆர், விக்ரம் பொன்னியின் செல்வன் போன்ற படங்களை கூறலாம்.
இந்த நிலையில் கதாநாயகர்கள் ஆதிக்கம் நிரம்பிய சினிமாவில் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி வணிக ரீதியாக வெற்றி பெறுவது எளிதான செயலாக இந்திய சினிமாவில் இல்லை.
அவ்வப்போது கதாநாயகிகளை முன்னிறுத்தும் படங்கள் வெற்றிபெறுவது உண்டு. தெலுங்கில் நடிகை விஜயசாந்தி உச்சத்தில் இருந்தபோது வணிக அடிப்படையில் லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தார்.
அவர் நடித்த படங்களுக்கு திரையரங்குகளில் கட் அவுட் வைக்கப்பட்டு, பாலாபிஷேகம் எல்லாம் நடந்திருக்கிறது அவருக்கு பின் தற்போது நடிகை சமந்தாவுக்கு அந்த கெளரவத்தை தெலுங்கு சினிமா ரசிகர்கள் வழங்கியுள்ளனர்.
ஹரி – ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யசோதா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று 5 மொழிகளில் 11.11.2022 அன்று வெளியானது.
இப்படத்தில் வரலட்சுமி, உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் திரையிட்ட முதல் நாளில் இருந்தே ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வசூல் அடிப்படையில் வெற்றிப்படமாக உள்ளது.
இதற்கு முன்பு கதையின் நாயகியாக நடித்த நடிகைகளின் படங்களை விட கூடுதலாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரும்பாலும் சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்குத்தான் அவர்களின் ரசிகர்கள் பிரமாண்டமான கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்துள்ள நிலையில்,
தற்போது சமந்தாவின் பிரம்மாண்டமான கட்அவுட்டிற்கு ஆந்திராவில் உள்ள அவரது ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்துள்ளார்கள்.
இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
இராமானுஜம்
வேலைவாய்ப்பு : மீன்வள பல்கலை கழகத்தில் பணி!
பற்றி எரிந்த அரசு பேருந்து : பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!