லைகா நிறுவனத்திற்குக் கடன் செலுத்தாத வழக்கில், விஷால் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைகாவிடம் கடன் வாங்கியது எப்படி
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர் விஷால். நடிகர் மட்டுமல்லாது விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
தனது தயாரிப்பு நிறுவனத்தின் மருது படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

விஷாலிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு லைகா நிறுவனம் கடன் தொகையைக் கோபுரம் நிறுவனத்திற்குத் திருப்பி செலுத்தியது.
ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
லைகா நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தைத் பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்கவும் விஷால் முயல்கிறார். இதற்குத் தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த பிறகு , 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக செலுத்த விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தில் விசாரணை
இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட் 26) இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி, நீதிமன்ற உத்தரவை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை என்று விஷாலிடம் கேள்வி எழுப்பினார்.
லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ததால் தனக்கு ஒரே நாளில் 18 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்திற்கு வட்டி கட்டி வருவதாகவும் இதனால் 6 மாதங்கள் ஆனாலும் கடனை செலுத்த இயலாது எனவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு லைகா நிறுவனம் தரப்பில், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஷால், தவறான தகவல்களைத் தெரிவித்து வருகிறார். அவர் தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய உத்தரவு
இதனைத் தொடர்ந்து நீதிபதி, தொடர்ந்து படத்தில் நடிக்கும்போது கடனை திரும்பச் செலுத்தலாமே என்றும், திரைப்பட வாழ்க்கை முடிந்து விட்டது எனச் சொல்ல வருகிறீர்களா என விஷாலிடம் கேள்வி எழுப்பினார்.
சினிமா வாழ்க்கை முடிந்ததாகக் கூறவில்லை. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சரி செய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாகவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விளக்கத்திற்குப் பிறகு நீதிபதி, செப்டம்பர் 9 ஆம் தேதி விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
மோனிஷா