“அஞ்சனாத்ரி” என்ற உலகில் ஒரு பையனுக்கு சக்தி கிடைப்பது தான் அனுமன் படத்தின் கதை என்று நடிகர் தேஜா சஜ்ஜா தெரிவித்துள்ளார். hanuman movie super power world
கற்பனை கதாபாத்திரங்களில் சூப்பர்மேன் திரைப்படங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வந்து கொண்டுள்ளது. இந்தியாவில் படத்தின் கதாநாயகர்களே சூப்பர் பவர் நிரம்பியவர்களாக முன்னிலைப்படுத்தபடுவதால் கற்பனை உலகமும், சூப்பர்மேன்களும் இந்தியாவில் சாத்தியமில்லாமல் இருந்து வருகிறது.
புராண இதிகாசங்களில் ஹனுமான் சூப்பர் பவர் சக்தி நிரம்பியவராக படைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஹனுமான் சக்தி சாமானிய மனிதனுக்கு கிடைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது தான் ஹனுமான் திரைப்படம் என்கிறது படக்குழு.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட மொழிகளில் ஜனவரி 12 அன்று ஹனு-மான் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக முழுக்க சிஜியில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் பத்திரிகையாளர் சந்திப்பை அந்தந்த மாநில தலைநகரங்களில் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்
தயாரிப்பாளர் சைத்தன்யா
திரைப்படத்தின் மீதான எங்களது காதலின் வெளிப்பாடாக இப்படைப்பை உருவாக்கியுள்ளோம். ஒரு சிறு முயற்சியாக துவங்கி பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது. உங்கள் எல்லோருக்கும் இப்படம் புது அனுபவமாக இருக்கும்.
நடிகர் வினய்
இது ஒரு தெலுங்குப்படம். முதலில் சின்னப்படமாக தான் ஆரம்பித்தது. ஆனால் ஹனுமனின் ஆசீர்வாதத்தில் இப்படம் பான் இந்திய அளவில் மிகப்பெரிய படமாக மாறியுள்ளது. இந்தப் படத்திற்காக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. நான் இந்தப்படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூமில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.
நடிகை அம்ரிதா ஐயர்
இந்தப்படம் இந்திய சினிமா பெருமைப்படும் படமாகவும், ரசிகர்கள் கொண்டாடும் படமாகவும் இருக்கும். சாதாரண பையனுக்கு அனுமனின் பவர் கிடைத்தால் என்னாகும் என்பது தான் கதை. ஆன்மீக படமல்ல, எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பார்கள். திரையரங்கில் பார்க்க வேண்டிய படம். இது புதுமையான அனுபவத்தைத் தரும்.
நடிகை வரலட்சுமி
இந்தப்படத்தின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. எல்லோரும் கதை சொல்லும்போது, படம் இப்படி வரும் என நினைப்போம், ஆனால் நாங்கள் யாருமே நினைக்காத அளவு, இப்படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. சைத்தன்யா மேடம் பிரசாந்த் கேட்ட அத்தனையும் தந்து, இப்படத்தை மிகப்பெரிய படமாகக் கொண்டு வந்துள்ளார்.
பிரசாந்த், தேஜா இந்தப் படத்திற்காகக் கடுமையாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் உழைத்துள்ளனர். இந்தப்படம் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும். டிரெய்லர் பார்த்திருப்பீர்கள், ஆனால் படம் இன்னும் நிறைய ஆச்சரியம் தரும். சில படங்களின் விஷுவலை திரையரங்கில் பார்த்தால் தான் அனுபவிக்க முடியும். இது அப்படியான படைப்பு.
நடிகர் தேஜா சஜ்ஜா
ஹனுமான் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இது தெலுங்குப் படமல்ல, நேரடித் தமிழ் படம் மாதிரி தான் இருக்கும். அதற்காக நிறைய உழைத்துள்ளோம். டிரெய்லரிலேயே படத்தின் தன்மை உங்களுக்குத் தெரியும். இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை.
“அஞ்சனாத்ரி” என்ற உலகை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளோம். ஒரு பையனுக்கு அனுமனின் சக்தி கிடைப்பது தான் கதை. வினய், வரலட்சுமி, அம்ரிதா என எல்லோரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர்.
படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. நம் தென்னிந்தியக் கலாச்சாரத்தில், பொங்கலுக்கு 4,5 படங்கள் பார்க்கும் வழக்கம் இருக்கிறது, அது போல் இந்தப் பொங்கலுக்கு எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள். இது ஓடிடியில் பார்க்கும் படமல்ல திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய படம்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே நாளில் மகளிர் உரிமை தொகை + பொங்கல் பரிசு!
கலைஞர் 100 விழா: கிண்டியில் போக்குவரத்து மாற்றம்!
hanuman movie super power world