திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் அகாடெமி விருதுக்கு அடுத்தபடியாக கோல்டன் குளோப் விருதுதான் விளங்கி வருகிறது.
Hollywood foreign press association வழங்கும் இந்த விருது விழா, நேற்று (ஜனவரி 11 ) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இதில், எஸ்.எஸ்.ராஜமொளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவிலும், அந்தப் படத்தின் மிகவும் பிரபலமான ‘நாட்டு நாட்டு “ பாடல் சிறந்த பாடல் பிரிவிலும் நாமினேஷனுக்கு தேர்வாகி இருந்த நிலையில், எம்.எம்.கீரவாணி இசையமைத்த அந்த பாடல் கோல்டன் குளோப் விருதை தட்டிச் சென்றது.
விருது அறிவிக்கப்பட்ட உடனே விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகின.
‘நாட்டு நாட்டு’ பாடலை ராகுல், கால பைரவா பாடியிருந்தனர். சந்திரபோஸ் எழுதியிருந்த பாடல் வரிகளுக்கு, பிரேம் ரஷித் சிறப்பான நடனம் அமைத்து இருந்தார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடனம் ஆடியிருந்தனர். உக்ரைன் அதிபர் மாளிகை முன்பு இந்த பாடல் படமாக்கப்பட்டது.
இந்நிலையில், கோல்டன் குளோப் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி குறித்து பார்ப்போம்.

ஆந்திர பிரதேச மாநிலம் கொவ்வூரில் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் எம்.எம்.கீரவாணி.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குவது மட்டுமின்றி, பாடலாசிரியராகவும் சில பாடல்களுக்கு பின்னணியும் பாடியுள்ளார் எம்.எம்.கீரவாணி.
80 காலகட்டங்களில் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், தெலுங்கு மட்டுமின்றி தமிழ்,மலையாளம்,கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
சுமார் 150 படங்களுக்கும் மேல் இசையமைத்திருந்தாலும், தனது உறவினரும், இயக்குநருமான ராஜமொளலியின் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம், ஆர்.ஆர்.ஆர் படங்கள் தான் அவரை உலகளவில் பிரபல இசையமைப்பாளராக மாற்றியது.
நாகர்ஜூனாவின் ’அன்னமயா’ திரைப்படம் இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்று கொடுத்தது.
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அழகன்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான எம்.எம்.கீரவாணி,
தொடர்ந்து ’நீ பாதி நான் பாதி’ , ’பாட்டொன்று கேட்டேன்’, ‘சிவந்த மலர்’, ‘சேவகன்’, ‘வானமே எல்லை’, ‘ஜாதி மல்லி’, ‘பிரதாப்’, ‘கொண்டாட்டம்’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘இஞ்சி இடுப்பழகி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
மேலும், ’அழகன்’ படத்திற்காக தமிழ்நாடு மாநில விருதையும் அவர் பெற்றுள்ளார்.
பி.வாசுவின் ‘சந்திரமுகி 2’ படத்திலும் எம்.எம்.கீரவாணி இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ராஜமொளலியின் மனைவி ரமாவின் சகோதரியும், தயாரிப்பாளருமான ஸ்ரீ வள்ளி என்பவரைத்தான் கீரவாணி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
61 வயதான இவருக்கு கால பைரவா என்ற மகன் உள்ளார். பிரபல பாடகரான இவர் தான் ராகுலுடன் இணைந்து ’நாட்டு நாட்டு’ பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சென்னை: தற்காலிக பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள்!
சேது சமுத்திர திட்டம் – முதல்வர் தனித்தீர்மானம்