போதைப் பொருள் தொடர்புடைய பணமோசடி வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017ஆம் ஆண்டு சோதனை நடத்தினர்.
இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத், நடிகைகள் சார்மி, முமைத்கான், ரகுல் பிரீத் சிங் உள்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாகத் தெரியவந்தது.
இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் இதில் தொடர்புள்ள 12 சினிமா பிரபலங்களுக்கும் கடந்த முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
குறிப்பாக, நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் சம்மன் அனுப்பப்பட்டு, அவர் அதே மாதம் 3ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது அவரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இதே போதைப் பொருள் தொடர்புடைய பணமோசடி வழக்கில், வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகை ரகுல் பிரீத், கார்த்திக் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்