பிரபல நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்த நபர் மயங்கி விழுந்து சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு ஆக்டிங் டிரைவர் பீட்சா, கோக் குடித்து உறங்கியுள்ளார் என தெரியவந்துள்ள நிலையில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சீதாராமம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சார்லி உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் துல்கர் சல்மான்.
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர், தனது குடும்பத்துடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் லேனில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் வடபழனி ஜவஹர்லால் நேரு தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (51) என்பவர் கடந்த 1 மாதமாக ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இன்று அதிகாலை நடிகர் துல்கர் சல்மானை விமான நிலையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதால், நேற்றிரவு பாஸ்கர் பீட்சா மற்றும் கோக்கை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி அருந்திவிட்டு, நடிகர் துல்கர் வீட்டின் அறையிலேயே உறங்கியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 2.30 மணியளவில் பாஸ்கருக்கு திடீரென அதிகளவிலான இருமல் வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை பணியாளர் ஸ்ரீஜித் என்பவர் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாஸ்கர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அபிராமபுரம் போலீசார் பாஸ்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். .
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலை.ரா
காலை சிற்றுண்டி திட்டம்: விசிட் அடித்த உதயநிதி
“ஹெல்மெட் அணியாத போலீசார் மீது கடும் நடவடிக்கை” – டிஜிபி எச்சரிக்கை!