தமிழ் சினிமாவில் அதிக எண்ணிக்கையிலான படங்களில் கதாநாயகனாக நடித்தவர் மோகன்.
திரைத் துறையில் 45 வருடங்களை நிறைவு செய்ததையொட்டி ரசிகர்கள் விழா ஒன்றை நேற்று (செப்டம்பர் 8) சென்னையில் நடத்தினார்கள்.
இவ்விழாவில் நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்திலிருந்து முதல் சிங்கிளாக ஒரு பாடல் வெளியிடப்பட்டது.
தமிழகமெங்குமிருந்தும் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் விஜய் ஶ்ரீ பேசுகையில், “மோகன் சார் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பிஸியாகவே இருக்கிறார்.
அவரிடம் கதை சொல்ல எனக்கு இரண்டு வருடங்கள் ஆனது. நிறைய கதைகள் கேட்டாலும் நல்ல படம் என்றால்தான் அவர் ஒப்புக் கொள்கிறார்.
இன்றும் ஷூட்டிங் செல்லும் இடங்களில் அவருக்காக ரசிகர்கள் குவிகிறார்கள். இந்தப் படத்தை அவர் ரொம்பவும் பிடித்து நடித்திருக்கிறார்.
அவருக்கு மிகச் சிறந்த படமாக இது இருக்கும். அவர் வெற்றி விழா நாயகன் என்பதை இப்படம் மூலம் மீண்டும் நிரூபிப்பார்” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “நான் இங்கு ஒரு இயக்குநராக அல்ல; ஒரு ரசிகனாக வந்திருக்கிறேன்.
பாலு மகேந்திராவின் மூத்த பிள்ளை அவர். கடைசிப் பிள்ளை நான் என்ற பெருமை எனக்கு உண்டு.
இளம் வயதில் அவரது படங்கள் பார்த்து ரசித்து வளர்ந்தேன். இயக்குநரான பின்பும் என் நடிகர்களுக்கு ரொமான்ஸ் காட்சிகளில் அவர் நடித்த காட்சிகளைத்தான் போட்டுக் காட்டுவேன்.
அவரது ‘ஹரா’ படம் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. விரைவில் அவரோடு இணைந்து படம் செய்யவுள்ளேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
நடிகர் மோகன் கூறுகையில், “நான் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் என்னுடன் இருப்பவர்கள் என் ரசிகர்கள்தான். அவர்களுக்கு என் மிகப் பெரிய நன்றி.
இந்த விழாவைக்கூட நான் வேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தேன். ஆனால் என் ரசிகர்கள் வற்புறுத்தியதால் ஒப்புக் கொண்டேன். இயக்குநர் பாலு மகேந்திராவின் மூத்த பிள்ளை நான்.
கடைசிப் பிள்ளையான இயக்குநர் சீனு ராமசாமி இங்கு வந்திருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
பாலு மகேந்திரா ஒரு மகா கலைஞர். அவருக்கு சினிமாவில் எல்லாமே தெரியும். அவரது முதல் படமான ‘கோகிலா’வில் அண்ணன் கமலுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
கமல் சார், ஷோபா மேடம், ரோஜா ரமணி என்று பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருந்தேன். மோகனின் ஃபேவரைட் படங்களில் கண்டிப்பாக ‘கோகிலா’ இடம் பிடித்திருக்கும்.
‘ஹரா’ படத்தில் என்னை மிக வித்தியாசமாக மாற்றி படமெடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்ஶ்ரீ.
இவருடன் இணைந்தது மகிழ்ச்சி. அப்பா, மகளுக்குள் உள்ள உறவை சொல்லும் கதை இது. குஷ்பு உடன் டூயட்டும் இருக்கு. உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
86 தமிழ் படம், 9 தெலுங்கு படம், 6 கன்னட படம் 5 மலையாள படம் என இதுவரை 106 திரைப்படங்களில் நடித்துள்ள மோகன், ‘ஹரா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்ய உள்ளார்.
இராமானுஜம்
பொன்னியின் செல்வனில் மணிரத்னம் செய்யும் மாற்றம்!
‘மிகவும் யதார்த்தமாக பேசுகிறீர்கள்’ : மத்திய அமைச்சரிடம் மயிலாப்பூர் மக்கள்!