மனம் திறந்த அமீரின் பகிரங்க கடிதம்: மீண்டும் பருத்திவீரன் பஞ்சாயத்து!
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு வாரங்களாக பருத்திவீரன் படம் பற்றிய விவாதம் பற்றி எரிந்தது. அப்படத்தின் இயக்குநர் அமீர் பற்றி தயாரிப்பாளர் கே.ஏ.ஞானவேல்ராஜா வலைத்தளம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.
இது சம்பந்தமாக அமீரிடம் கருத்து கேட்ட போதும், பேட்டி கேட்டபோதும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்தக் கருத்தும் கூற முடியாது, இந்தப் படம் எந்த சூழலில் தொடங்கப்பட்டது, படம் முடிக்கப்பட்டு பஞ்சாயத்து நடத்திய, சாட்சி கையெழுத்து போட்ட பெரியவர்கள் உண்மைநிலையை விளக்க வேண்டும் என 24.11.2023 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதன் பின்னர் நடிகர் சசிக்குமார், பருத்திவீரன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய சமுத்திரக்கனி, கவிஞர் சினேகன், நடிகர் பொன்வண்ணன், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கரு பழனியப்பன் ஆகியோர் அமீருக்கு ஆதரவாக, தயாரிப்பாளர் கே.ஏ. ஞானவேல் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேட்டி யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அவரவர் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டனர்.
இதன் காரணமாக கே.ஏ.ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதனை கையெழுத்து இல்லாத அறிக்கை என்று நடிகர் சசிகுமார் கிண்டல் செய்தார். சமுத்திரகனியோ பருத்திவீரன் படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பள பாக்கி உள்ளது. அமீருக்கு பைசா பாக்கியில்லாமல் பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என மீண்டும் தனது எக்ஸ் தளத்தில் கருத்தை வெளியிட்டார். இருந்தபோதிலும் உண்மையில் பருத்திவீரன் பட விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை வெளிப்படையாக இயக்குநர் அமீர், தயாரிப்பாளர் கே.ஏ. ஞானவேல் ராஜா இருவரும் கூறவில்லை.
இந்தநிலையில் பருத்திவீரன் பஞ்சாயத்து நடைபெற்ற 2006 – 2008 வரையிலான காலத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளராக இருந்தவர் சிவசக்தி பாண்டியன், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இராம நாராயணனாக இருந்தாலும் பெயரை போன்றே சங்கத்தின் சக்திமிக்க செயல் தலைவராக சிவசக்தி பாண்டியன் செயல்பட்டார். அவர் சொல்வதுதான் முடிவு அதற்கு எதிராக தயாரிப்பாளர்கள் பேசமுடியாது என்கிற சூழல் நிலவியது.
பருத்திவீரன் பஞ்சாயத்திலும் அவ்வாறே நடைபெற்றது என்பது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தெரியும். இருந்தபோதிலும் இன்றுவரை எவரும் பருத்திவீரன் சர்ச்சையில் வெளிப்படை தன்மையுடன் பேசவில்லை. முன்னணி சினிமா வலைத்தளங்கள் தங்கள் பார்வையாளர்களை அதிகரிக்கவும், பரபரப்புக்காகவும் தங்கள் சேனலுக்கு பேட்டி கொடுக்கும் திரைபிரபலங்களுக்கு சன்மானம் வழங்கும் பழக்கம் இருந்து வருகிறது.
அப்படி எடுக்கப்பட்ட பேட்டியில் பருத்திவீரன் பட பஞ்சாயத்து சம்பந்தமான கேள்விகளுக்கு கூறிய பதில் குறித்து இயக்குநர் அமீர் சிவசக்தி பாண்டியனுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,
”தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு, ஓர் மனம் திறந்த மடல்.
சென்னையைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில், அதனுடைய தாக்கத்தில் இருந்து மீளமுடியாமலும், அந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய முடியாமலும், மீண்டும் தங்களது வாழ்க்கையைச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்.. எனது ’பருத்திவீரன்’ தொடர்பான இதுபோன்ற ஒரு கடிதத்தை வெளியிடுவதில் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.
ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு ’பருத்திவீரன்’ திரைப்பட வெளியீட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல தேவை ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில், சிவசக்தி பாண்டியனுடைய நேர்காணலுக்குப் பதில் சொல்லாமல் நான் கடந்து விட்டால், நானே உண்மைகளை மறைப்பதாக ஆகிவிடும்.
எனவே, சிவசக்தி பாண்டியனாகிய உங்களுக்கும், ’பருத்திவீரன்’ படம் சம்பந்தமான பிரச்னையில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், ஊடகத் துறையினருக்கும் உண்மை நிலையைத் தெரிவிக்க மட்டுமே இந்தக் கடிதம். இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
சமீபத்தில், ஒரு காட்சி ஊடகத்தில், ’பருத்திவீரன்’ திரைப்படம் தொடர்பாக தாங்கள் பேசியிருந்த இரண்டு நேர்காணல் பகுதிகளை இன்றைக்கு நான் பார்த்தேன்.
’பருத்திவீரன்’ திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்னையில் தாங்கள் தலைமையேற்றிருந்தீர்கள் என்ற உண்மையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்களே பொதுவெளியில் ஒப்புக்கொண்டதை நான் மனதார வரவேற்கிறேன். மேலும், அந்த நேர்காணலில் என் மீதும், என் தொழிலின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், பாராட்டுதலுக்கும் நான் உளமார நன்றி கூறுகிறேன்.
சக திரையுலகினர் அனைவரையும் அன்போடு அரவணைக்கும் தங்களது பாங்கு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே தான், தங்களது நேர்காணல் முற்றிலும் “எல்லோரும் நல்லவரே.” என்கிற பாணியில் அமைந்திருந்தது என்பதை உணர்கிறேன்.
தங்களின் நேர்காணலில் தாங்கள் பேசியிருந்த விசயங்களில் உள்ள முரண்பாடுகளை அல்லது தாங்கள் சொல்ல மறந்த உண்மைகளை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.
நிறைய விசயங்களை தாங்கள் சொல்லியிருந்தாலும், சில விசயங்களை தாங்கள் மறந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்தக் கடிதத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
திரைப்படங்களில் விவகாரம் இருக்கும் பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தால், சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைக்கப்படும் என்று சங்க நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
அந்த வகையில், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற ’TEAMWORK PRODUCTION HOUSE’ என்ற என்னுடைய நிறுவனத்தின் சார்பில் சென்சார் செய்யப்பட்ட ’பருத்திவீரன்’ திரைப்படத்தை இன்னொருவர் பெயருக்கு மாற்றிக் கொடுக்கக் கூடிய சூழ்நிலை தங்களுக்கு உருவானதா? அல்லது உருவாக்கப்பட்டதா? என்பதை தாங்கள் அந்த நேர்காணலில் தெளிவாக விளக்கவில்லை.
எனது, ’TEAMWORK PRODUCTION HOUSE’ நிறுவனத்தின் பெயரில் தணிக்கை செய்யப்பட்ட ’பருத்திவீரன்’’ திரைப்படத்தை ’அரசியல் அழுத்தம்’ காரணமாகவே ஞானவேலுக்கு தாங்கள் மாற்றிக் கொடுக்கக்கூடிய சூழல் தங்களுக்கு உருவானது என்பதை அன்றைய காலகட்டத்தில் என்னிடம் எடுத்துரைத்தீர்கள்.
தாங்கள் சொல்வது உண்மையா? பொய்யா? என்பதை அறிய முடியாத சூழலே அன்றைக்கு எனக்கு இருந்தது. இருந்த போதும், வேறுவழியின்றி சங்க நிர்வாகிகள் சொன்னதை உண்மையென்று நம்பியே, எனது ’பருத்திவீரன்’ திரைப்படத்தை நான் வேறொரு நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தேன்.
பிறிதொரு முறை திரைப்பட வெளியீட்டுக்குப் பின்னர், அன்றைய முதல்வரை, அவரது இல்லத்திலேயே சந்தித்து நடந்த விபரங்களை நான் அவரிடம் எடுத்துச் சொன்னபோது, ’தனக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று அவர் கூறிய பின்பு தான் நான் முழுவதுமாக திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தேன் என்பதை இப்போது தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ’பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அமீர் நீதிமன்றத்தை நாடியிருப்பது தேவையற்றது. ஒரே குடும்பமாக இருக்க வேண்டிய நாம், தயாரிப்பாளர் சங்கத்திலேயே பேசித் தீர்த்திருக்கலாம்’ என்றும் அந்த நேர்காணலில் தாங்கள் கூறியிருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2006-2008 காலகட்டத்தில் செயலாளராக இருந்த சிவசக்தி பாண்டியன் ஆகிய தங்களுக்கு மீண்டும் ஒரு விசயத்தை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
தங்கள் முன்னிலையிலும், அன்றைய காலகட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்துடனும் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை, Studio Green நிறுவனம் மீறிவிட்டது என்றும், தங்களால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்றும், சிவகுமார் எங்களது அழைப்பையே ஏற்க மறுக்கிறார் என்றும் ஞானவேல் எங்களுக்கு கட்டுப்பட மறுக்கிறார் என்றும் தாங்களும், தயாரிப்பாளர் சங்கத்தின் அப்போதைய தலைவர் மறைந்த ராம.நாராயணனும் என்னிடம் பலமுறை சொன்னதை நீங்கள் தற்போது மறந்து விட்டீர்கள் போலும்.
’பருத்திவீரன்’ திரைப்படம் வெளியான பின்பு, ’தங்கள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுங்கள்’ என்று நான் தினமும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அலைந்து திரிந்தது தங்களுக்கு நினைவில் இல்லையா.? ’எளியவனை வலியவன் அழுத்திக் கொல்வான்’ என்பதும் ’நல்லான் வகுத்ததா நீதி? இங்கே வல்லான் வகுத்ததே நீதி’ என்பதையும் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு எடுத்துரைத்ததன் காரணமாகவும், தங்களின் மீதும், தயாரிப்பாளர் சங்கத்தின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கை பொய்யான பின்பும் தான், நான் நீதிமன்றத்தை நோக்கித் தள்ளப்பட்டேன் என்பதே மறுக்க முடியாத உண்மை.
ஒரு கட்டத்தில் நெறியாளர், ’அமீருக்கு 80 லட்சம் கொடுக்க வேண்டும் என சங்கத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டதா?’ என்ற கேள்வியை முன்வைக்க, தாங்கள் அதை உறுதி செய்யாமலேயே கடந்து சென்றது ஏன்? என்று எனக்குப் புரியவில்லை.
’அமீருக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு என்பது உறுதி செய்யப்படவில்லை’ என்று தாங்கள் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறீர்கள். இதே கருத்தே, நீதிமன்றத்திலும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Affidavit-டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் இப்போது தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
மேலும், இப்பிரச்னை தொடர்பாக நான் நீதிமன்றம் சென்ற பிறகு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகவே இல்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறை தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகம் மாறும் போதும், நான் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி எனது கோரிக்கையை எழுப்புவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில், சங்கத்தின் தேர்தல் நேரங்களில் தங்களை இரண்டு முறை நான் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போது, ’உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை குறித்த தீர்மான நகலைத் தருகிறேன்’ என்று தாங்கள் வாக்களித்ததையும் தங்களுக்கு நினைவு கூறுகிறேன்.
மேலும், அந்த தீர்மான நகலைப் பெறுவதற்காக நான் நீதிமன்றத்தின் மூலமாகவும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தேன் என்பதும் தாங்கள் அறிந்ததே. இன்று வரை அந்த தீர்மான நகல் எனக்கு அளிக்கப்படவேயில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
மேலும், தாங்கள் ’கணக்கு வழக்கை இப்போது எடுத்துக் கொண்டு வாருங்கள்.. அதை வைத்து சரி பார்க்கலாம்’ என்று நேர்காணலில் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். 17 வருடங்களுக்கு முன்பாகவே கணக்கு வழக்குகள் அனைத்தும் தயாரிப்பாளர் கஃபார் மூலமாக சங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதை ஞானவேல் அவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் கொடுத்து விட்டது என்பதை மறந்து விட்டீர்கள் போலும்.
ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு சட்டப்பிரிவின் படி, ’பருத்திவீரன்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தணிக்கைச் சான்றிதழில் மாற்றப்பட்டதாக தாங்கள் போகிற போக்கில் அந்த நேர்காணலில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் தணிக்கைச் சான்றிதழ் பெறவே முடியாது என்பது பல ஆண்டுகளாக நிர்வாகத்தில் இருந்த தங்களுக்கு தெரியாமல் போனது எனக்கு ஆச்சர்யமே.
’பருத்திவீரன்’ திரைப்பட வெளியீட்டிற்குப் பிறகு சூர்யாவும், கார்த்தியும் எனக்குத் தேதி தருவதாகச் சொன்னதாகவும், அதற்காக அவர்கள் என்னைப் பலமுறை தொடர்பு கொண்டதாகவும், அவர்களை வைத்துப் படம் தயாரித்து நான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று சிவகுமார் என்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவலை கூறியிருக்கிறீர்கள். ’பருத்திவீரன்’ திரைப்பட வெளியீட்டுக்குப் பின்பு, அப்படி எந்த நிகழ்வும் இன்று வரை நடைபெறவில்லை. யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை, யாரும் என்னைச் சந்திக்கவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
நான் திரைத்துறைக்கு வந்த காலம் தொட்டே, பிரபல நடிகர்களைச் சந்தித்து, அவர்களிடம் தேதி வாங்கி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே ஏற்பட்டது இல்லை. இதை பல நேர்காணல்களில் நான் கூறியிருக்கிறேன் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
மேலும், ஞானவேல்ராஜாவே பல நேர்காணல்களில் ’பருத்திவீரன்’ திரைப்படத்துக்கு 4 கோடியே 85 லட்ச ரூபாய் செலவிட்டதாக கூறியுள்ள போது, தாங்கள் 6 கோடி ரூபாய் செலவானதாக தவறான தகவலை அளித்துள்ளீர்கள்.
மிக முக்கியமாக, ’Team Work Production House’ என்ற நிறுவனத்தின் பெயரில் இருந்த எனது ’பருத்திவீரன்’ திரைப்படத்தை,’Studio Green’ நிறுவனத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின், யார் யாருக்கு எந்தெந்த ஏரியாக்கள் வினியோக உரிமையாக கொடுக்கப்பட்டன? என்ற விபரத்தையும், அன்றைக்கு நடந்த பேச்சுவார்தையின் போது யார் யார் உடனிருந்தார்கள்? என்பதையும், அவர்களில் யார் யார் என்னென்ன பேசினார்கள்? என்பதையும் தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.
ஒருவேளை அதையும் தாங்கள் மறந்திருந்தால், அனைத்து விபரங்களையும் இனி வரும் காலங்களில் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.
இறுதியாக அந்த நேர்காணலில், ’படம் வெற்றி பெற்று விட்டது. அதனால், Studio Green நிறுவனத்தார், அமீருக்கு ஏதாவது நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும், ஞானவேல் ஏதேனும் பணம் தரவேண்டும்’ என்றும் கூறியிருக்கிறீர்கள்.
நான் பெற விரும்புவது, ’யாசகம் அல்ல. என்னுடைய உரிமையை’ என்பதை மீண்டும் மீண்டும் தங்களுக்கும், இப்பிரச்னை சார்ந்தோர்க்கும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட கடிதத்திலும் இயக்குநர் அமீர் பல்வேறு சம்பவங்களையும், தகவல்களையும் தவிர்த்திருக்கிறார் என்கின்றனர் தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் வட்டாரத்தில்.
சென்னை புயல் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டதால் பருத்திவீரன் பிரச்சினை அமுங்கிபோனதுடன், ஊடக கவனமும் தவிர்க்கப்பட்டு இருந்த நிலையில் இயக்குநர் அமீர், சிவசக்தி பாண்டியனுக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம் பருத்திவீரன் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கபோகிறது என தெரிகிறது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்!
மாதவிடாய் – யோகா எப்படி உதவும்?
வேலைவாய்ப்பு : TNWEC – நிறுவனத்தில் பணி!