இந்திய கிரிக்கெட் வீரர்களில் தமிழ்நாட்டு மக்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி.
இந்தியாவில் வேறு எந்த கிரிக்கெட் வீரரும் தமிழக மக்களை தோனி போல் வசீகரித்தது இல்லை.
கடந்த ஒரு வருடகாலமாக நடிகர் விஜய் நடிக்கும் படத்தை தோனி தயாரிக்கப்போவதாக தமிழ் ஊடகங்களில் செய்திகள் வருவதும், அது வதந்தி என கூறப்பட்டு வந்தது தற்போது உண்மையாகி உள்ளது.
மகேந்திர சிங் தோனியும் அவரது மனைவி சாக்க்ஷியும் இணைந்து‘தோனி என்டர்டெயின்மென்ட்’ பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். சாக்க்ஷி தோனியின் திரைக்கதையில் தயாரிக்கப்படும் அந்தத் திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
தமிழில் தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி கூறுகையில்,
“சாக்ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது.
புத்தம் புதிதாய் இருந்த இந்தக் கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து, சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன்.
இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி, திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதை பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.
இந்தத் திரைப்படத்தில் பங்கேற்கவுள்ள திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
ஏற்கனவே தோனி எண்டர்டெயின்மென்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு ‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தையும்,
‘வுமன்’ஸ் டே அவுட்’ என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம்.
தமிழில் மட்டுமின்றி அறிவியல் புனைவு கதை, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் பலவகையான திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிப்பதற்காகவும்,
திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும்,
இந்த நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு திரைப்படங்களைத் தயாரிக்க உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இராமானுஜம்
”தீபாவளிக்கு பிறகு ’காந்தாரா’ பாருங்கள்!” பிரபல இயக்குநர் வேண்டுகோள்
வெடித்து சிதறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் மாருதி கார்!