தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் பேட்டியால், நடிகர் தனுஷின் ரசிகர்கள் இப்போதே உற்சாகத்தில் உள்ளனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘நானே வருவேன்’. ’மயக்கம் என்ன’ படத்திற்கு பிறகு மீண்டும் செல்வராகவன்-தனுஷ் இணைந்துள்ள படம் இது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், செல்வராகவன், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். இதற்கு முன் தனுஷ் நடித்த அசுரன், கர்ணன் போன்ற படங்களையும் தாணுதான் தயாரித்திருந்தார்.
‘நானே வருவேன்’ படம் குறித்து தயாரிப்பாளர் தாணு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி #NaaneVaruvean செப்டம்பர் மாதம் வெளியீடு.
நீங்கள் ஆவலுடன் காத்திருந்த டீசர் வரும் 15 தேதி வெளியிடப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.
இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளரான தாணுவிற்கு ’நானே வருவேன்’ படத்தை பிரத்யேகமாக போட்டுக் காட்டி உள்ளனர்.
இப்படம் பற்றி தயாரிப்பாளர் தாணு, தனியார் நியூஸ்கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பதில் அளித்திருந்தார்.
அதில், ‘நானே வருவேன்’ படம் பற்றி அவர் கூறியது நடிகர் தனுஷ் ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்கு அதிகரிக்க செய்துள்ளது.
அந்தப் பேட்டியில், “வில்லன், ஹீரோ என இரு ரோல்களில் தனுஷ் தம்பி நடித்து அசத்தி உள்ளார். மிக அற்புதமான நடிப்பு. இப்படி ஒரு வில்லனை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க.
இப்படி ஒரு வில்லனை தமிழ் சினிமா இதுவரை பார்த்திருக்காது. இதை அடிப்படையாக வைத்து பல படங்கள் வரலாம். பயங்கரமான பர்ஃபாமன்ஸ். அள்ளிடும். தொட்டது துலங்கும். பட்டது மிளிரும். இந்த படத்தை எத்தனை முறை பார்ப்பார்கள் என்றே தெரியாது.
தனுஷ் ரசிகர்கள் சேர் மீது ஏறிக் குதிப்பார்கள். தனுஷ் ரசிகராக இல்லாதவர்கள் இனி ரசிகராவார்கள்.
பல புதிய ரசிகர்கள் வருவார்கள். அப்படி ஒரு நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தி உள்ளார். இந்த படத்திற்கு பிறகு தனுஷைத் தேடி நிறைய டைரக்டர்கள் வருவார்கள்.
நிறைய வித்தியாசமான ரோல்கள் வரும். நிறைய தயாரிப்பாளர்கள் செல்வராகவனை நோக்கிச் செல்வார்கள்.
அதனால்தான் எனக்காக இன்னொரு படம் பண்ணிக் கொடுக்க வேண்டும் என இப்போதே அவரை புக் செய்துவிட்டேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
தாணுவின் பேட்டியால், தனுஷின் ரசிகர்கள் இப்போதே உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்துவிட்டனர்.
ஜெ.பிரகாஷ்
”ஒரே ஒரு ஊருக்குள்ள இரண்டு ராஜா”-இரட்டை வேடம் போடும் தனுஷ்