‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தானே இயக்கி நடிக்கும் ’தனுஷ் 50’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். அந்தப்படம் ஏப்ரல் 11 அன்று வெளிவருமென்றும் கூறப்படுகிறது.
தற்போது தனுஷ், தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘தனுஷ் 51’ என்று சொல்லப்படும் அந்தப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சேகர் கம்முலா இயக்கும் படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் படத்தில் நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்தான் என்கிறார்கள்.
இருபத்தைந்து கோடி வரை சம்பளம் வாங்கி கொண்டிருந்த நடிகர் தனுஷ். இந்தப் படத்துக்கும் அவ்வளவுதான் கேட்பார் என்று தயாரிப்பு தரப்பில் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், இந்தப்படத்துக்குச் சம்பளமாக சுமார் நாற்பது கோடி வேண்டும் என்று கேட்டு தயாரிப்பு தரப்பை அதிர வைத்திருக்கிறார்.
ஹெச்.வினோத்-தனுஷ் கூட்டணி என்பதால் இப்படத்தின் வியாபாரம் முந்தைய படங்களைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.
என்றாலும் தனுஷ் கேட்கும் சம்பளத்தைக் கொடுத்து அதன்பின் இயக்குநர் மற்றும் மற்ற நடிகர் நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் சம்பளம் ஆகியவற்றோடு, படப்பிடிப்புக்கான செலவுகளை கணக்குப் போட்டால் வணிக ரீதியாக லாபகரமாகவும், பாதுகாப்புக்குரியதாகவும் இல்லை என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து நடிகர் தனுஷ்க்கு விரிவாக கூறப்பட்டிருக்கிறது.
இதையடுத்து பலமுறை இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருக்கிறது. இறுதியாக சுமுகமான முடிவு எட்டப்பட்டு அதன்படி தனுஷுக்கு சுமார் முப்பத்தைந்து கோடி சம்பளம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
இந்தச் செயலிகள் உங்கள் செல்போனில் இருக்கிறதா? உடனே நீக்குங்கள்!