மன்னர் வகையறா படத்திற்காக வாங்கிய கடனை நடிகர் விமல் வட்டியுடன் பைனான்சியரிடம் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் பூபதிபாண்டியன் இயக்கத்தில் விமல் நாயகனாக நடித்த படம் மன்னர் வகையறா. தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத சூழலில் விமல் சொந்தமாக தயாரித்து இப்படத்தை 2018ஆம் ஆண்டு வெளியிட்டார்.
இந்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் விமல், பைனான்சியர் கோபியிடம் 3.6 கோடி ரூபாய் கடனாக வாங்கியிருந்தார்
படம் வெளியாவதற்கு முதல் நாள் கடனை வட்டியுடன் திருப்பித் தருவதாக விமல் கூறிய நிலையில், அவரால் சொன்னபடி கோபிக்கு பணத்தை திருப்பி கொடுக்க இயலவில்லை.
இந்நிலையில் படவெளியீட்டை தடுக்க கூடாது என்கிற அடிப்படையில் கடனுக்கான தொகைக்கு விமல் கொடுத்த காசோலையை கோபி பெற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால் விமல் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டது.
இதனால் 2020 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி.
இதனை திசை திருப்பும் வகையில், தனக்கு ஒழுங்கான கணக்குகளை கொடுக்காமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக பைனான்சியர் கோபி, தயாரிப்பாளர் சிங்காரவேலன் ஆகியோர் மீது சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் விமல் மோசடி புகார் அளித்தார்
அதன் அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டார்.
இது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை விமல் அணுகிய விதம் தவறானது என தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில், விமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரசம் ஏற்பட்டு, 2021 ஆம் ஆண்டு செடம்பர் மாதம் ரூபாய் 3.6 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித் தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.
ஓராண்டு கடந்தும், பணம் கொடுக்காததால் 2022 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோபி.
இந்த வழக்கை நேற்று (ஆகஸ்ட் 29) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கோபியிடம் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் 3.6 கோடி ரூபாய்க்கு 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என விமலுக்கு உத்தரவிட்டுள்ளது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை பிரியாணி போட்டி : ஹோட்டல் மேலாளர் மீது வழக்கு!
பியூட்டி டிப்ஸ்: எந்த நேரத்தில் வொர்க் அவுட் செய்வது நல்லது?