மோசடி வழக்கில் லதா ரஜினிகாந்திற்கு பெங்களூரு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 26) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. முழுக்க முழுக்க அனிமேஷன் படமாக வெளியான இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை என்பதால் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதக் கையொப்பம் செய்திருந்தார்.
ஆனால் முரளி கடனாக பெற்ற தொகையை திருப்பி தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது ஆட் பீரோ நிறுவனம் பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
அதன் பிறகு முரளி, லதா ரஜினிகாந்த் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்து லதா ரஜினிகாந்த் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் 196, 199, 420 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அதனை ரத்து செய்தது.
ஆனால் லதா ரஜினிகாந்த் மீதான 463 பிரிவு குறித்து கீழமை நீதிமன்றம் விசாரிக்கலாம் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து லதா ரஜினிகாந்த் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் தொடர்பான வழக்கை பெங்களூரு நீதிமன்றம் விசாரிக்கும் என்று உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் லதா ரஜினிகாந்திற்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் லதா ரஜினிகாந்த் ஜாமீன் கோரி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி வழக்கு விசாரணையை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தொடர்ந்து சென்னை திரும்பிய லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோச்சடையான் பட விவகாரத்தில் வேண்டுமென்றே என்னை தொடர்புப்படுத்தி வருகின்றனர். நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக தான் நேரில் சென்றேன்.
நான் அவர்கள் மீது அவதூறு வழக்குப் போட உள்ளேன். இனிமேல் செட்டில்மெண்ட் செய்ய வேண்டும் என்று மிரட்ட முடியாது. இந்த பிரச்சனை இவ்வளவு தூரம் வரும் என்று நினைக்கவில்லை.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் அவரை ஒரு தலைவராகத்தான் பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
“நிர்மலா சீதாராமன், சக்திகாந்த தாஸ் பதவி விலகணும்” : ஆர்பிஐக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!