தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், மணிரத்னம் என ஜாம்பவான்கள் முயன்றும் முடியாமல் கிடப்பில் போடப்பட்ட அமரர் கல்கி எழுதிய கற்பனை கலந்த பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் 1000ம் கோடி ரூபாய் செலவில் இரண்டு பாகங்களாகத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தற்போது லண்டனில் வசித்து வரும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். இவ்வளவு முக்கியத்துவம் மிக்க பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிராக வழக்கறிஞர் ஒருவர் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் ஊடக கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த செல்வம்.
பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாகக் கூறி இயக்குநர் மணிரத்னம், நடிகர் விக்ரம் உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில், “சோழ வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது. இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளார். இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பதைப் படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார்.தங்களுக்குத் திரையிட்டுக் காட்டாமல் படத்தை வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொன்னியின் செல்வன் படத்தில் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதா என்பது தங்களுக்குத் தெரிய வேண்டும் என ”தெரிவிக்கப்பட்டுள்ளது
இயக்குநர் மணிரத்னம் படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் விக்ரம் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-இராமானுஜம்