புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்: வரலட்சுமி சரத்குமார்
புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ‘Institute of Child Health’-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
‘ஜாய் ஆஃப் ஷேரிங்’ என்ற இந்த நிகழ்வை, சேவ் சக்தி அறக்கட்டளை மற்றும் சங்கல்ப் பியூட்டிஃபுல் வேர்ல்ட் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் நடிகை வரலட்சுமி சரத்குமார், டாக்டர் வேல் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் “புற்றுநோயாளிகள் பலரைக் காப்பாற்றும் இதயத்தைத் தொடும் பணியைச் செய்து வரும் மீட்பர்களான மருத்துவர்களுடன் இந்த பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது நெருங்கிய, அன்புக்குரியவர்கள் சிலர் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது மட்டுமே புற்றுநோய் குறித்து சிந்திக்கிறோம். இவர்களுக்கு நாம் எதாவது நன்மை செய்ய வேண்டும் என்றால், நாம் அதிகம் சிரமப்படவோ அல்லது பெரிய அளவில் ஏதாவது பங்களிக்கவோ தேவையில்லை.
ஆனால், குறைந்தபட்சம் ரூ.10 கொடுப்பது கூட பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சென்னையிலிருந்து கொல்கத்தா வரை 1746 கிமீ தூரத்தை சைக்கிள் பயணம் மேற்கொண்டு முடித்தவர்களைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். பல நோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களின் உயிர்காக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள் என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளனர்.
பல நோயாளிகள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!
ஜெயம் ரவியின் அகிலன்: ஹிட்டடிக்குமா?…படக்குழுவினர் சொல்வது என்ன?