உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம் நடிகையான அகன்ஷா துபே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரேதேசம் மிர்சாபூரை சேர்ந்தவர் அகன்ஷா துபே (25). டிக் டாக் மூலம் பிரபலமான இவர் போஜ்புரி திரைப்படங்களில் நடித்து வந்தார்.
’மேரி ஜங் மேரா ஃபைஸ்லா’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான அகன்ஷா, ’முஜ்சே ஷாதி கரோகி’ (போஜ்புரி), ’வீரோன் கே வீர்’, ’ஃபைட்டர் கிங்’, ’கசம் பைடா கர்னே கே.ஐ 2’ மற்றும் பல படங்களில் நடித்தார். இதன்மூலம் சிறுவயதிலேயே தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் அகன்ஷா.
திரைத்துறையில் பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்த இவர் இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்னர் அகன்ஷா, அந்த பகுதியில் இருக்கும் சாரந்த் என்ற ஹோட்டலில் இரவு தங்கியுள்ளார்.
ஆனால் இன்று (மார்ச் 26) அவர் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அகன்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நடிகையின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று சக நடிகர் சமர் சிங்கை காதலிப்பதாக இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் அகன்ஷா உறுதிப்படுத்தியிருந்தார். எனவே இந்த தற்கொலையில் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் நேற்று இரவு தான் அகன்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஜ்புரி பாடலுக்கு கண்ணாடி முன் நடனமாடும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென இன்று தற்கொலை செய்துள்ளது போஜ்புரி திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா