“சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பன்மொழி பேசும் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு, அவை இந்திய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருவதை சமீப காலமாக பார்த்து வருகிறேன்” என கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
‘கே..ஜிஎஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னட படங்களின் வியாபார எல்லை அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம் ‘பனாரஸ்.
கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பியூட்டிஃபுல்’, ‘மனசுகுலு’,’பெல்பாட்டம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜெயதீர்த்தா இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார்.
இப்படத்திற்கு, அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
அந்நிகழ்வில் நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், நாயகன் ஜையித் கான், நாயகி சோனல் மாண்டீரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் துவக்கத்தில் ‘பனாரஸ்’ படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுப் பேசிய நடிகர் ரவிச்சந்திரன்,
“சமீப காலமாக கன்னட சினிமா இந்திய அளவிலும் உலக நாடுகளிலும் வெற்றி பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
அந்த வரிசையில் இந்த பனாரஸ் படமும் மாபெரும் வெற்றிபெறும் என்பது இப்படத்தின் ட்ரெயிலரைப் பார்த்தாலே தெரிகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால் பேசுகையில், “வீட்டிலிருந்து இந்நிகழ்ச்சிக்குப் புறப்பட்டபோது, என் மனைவி விழாவில் உணர்ச்சி வசப்படாமல் நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
ஆனால் என்னால் அப்படி உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் இப்படம் முழுக்க முழுக்க உணர்வுகளைப் பேசும் படம்” என்றார்.
நாயகி சோனல் மாண்டீரோ, “ இதற்கு முன் சுமார் 10 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இது என் வாழ்வின் முக்கியமான படம்.
இவ்வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு என் மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன்.
விளம்பர டிசைன்களில் நாயகன் பெயர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
அவருக்கு இது முதல் படம் என்பதால், அவரை சற்று கூடுதலாக புரமோட் செய்வதில் தவறில்லை” என்றார்.
இயக்குநர் ஜெயதீர்த்தா பேசும்போது, ”இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது ஜானர் கதைகளைத்தான் எடுத்து வந்துள்ளேன்.
அதனால் எனக்கு நிரந்தர ரசிகர்கள் இல்லை. இந்த ‘பனாரஸ்’ படமும் அப்படிப்பட்ட முற்றிலும் ஒரு ஜானர் வகையறா படம்தான்.
இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளி வந்துள்ளோம்.
இது ஒரு யுனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்” என்றார்.
பனாரஸ் படத்தில் நாயகனாக அறிமுகமாகும் ஜையத் கான் கூறுகையில், “நான் அரசியல் குடும்பத்துப் பிள்ளை என்பதால் சினிமாத் துறைக்கு வருவதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது.
குறிப்பாக அப்பா நான் சினிமாவுக்குள் வருவதை கடுமையாக எதிர்த்தார்.
அவரது நெருங்கிய நண்பர்களை வைத்து சமரசம் செய்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.
இந்த இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு மேல் தூங்கியதே இல்லை.
முதலில் இப்படத்தின் சில காட்சிகளை மட்டும் காசியில் ஷூட் செய்துவிட்டு மீதியை மற்ற லொகேஷன்களில் மேட்ச் செய்துகொள்ளலாம் என்றுதான் காசிக்கு சென்றோம்.
காசியில் விநோதமான சில இடங்களால் ஈர்க்கப்பட்டு மொத்தப்படத்தையும் அங்கேயே முடித்திருக்கிறோம்.
படப்பிடிப்பில் ஒரு பக்கம் நாங்கள் காதல் காட்சி எடுத்துக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கில் பிணங்களை எரித்துக்கொண்டிருப்பார்கள்.
எவ்வளவு முரணான நிகழ்வு பாருங்கள். ஆனால் அதுதான் நடந்தது. என்னைப் பொறுத்தவரையில் இந்த ‘பனாரஸ்’படம் என்பது காசியின் புனிதம் கலந்த காதல் கதை” என்றார்.
‘பனாரஸ்”வரும் நவம்பர் 4ம் தேதியன்று கன்னடம், தமிழ்,மலையாளம், தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இராமானுஜம்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
தென்மாவட்டத்தை வளைக்க எடப்பாடி போடும் பலே ப்ளான்!