“அவள் அப்படித்தான் – 2” கதை இது தான்!

சினிமா

இயக்குநர் ருத்ரய்யாவின் இயக்கத்தில் 1978-ஆம் ஆண்டில் வெளியான ‘அவள் அப்படித்தான்’ படம் பெண்ணின் சுய உரிமையைப் பற்றிப் பேசிய படமாகக் கவனிக்கப்பட்டது.

படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சகர்களால் பேசப்படும் படமாகவும், குறிப்பிடத்தக்க படமாகவும் இன்றளவும் பேசப்படுகிறது.

அந்தப் படத்தின் நீட்சியாக இப்பொழுது அதே சிந்தனையின் இன்னொரு வடிவமாக ‘அவள் அப்படித்தான்-2’ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சுயமரியாதை கொண்ட ஒரு பெண்ணாக கதை நாயகியாக நடித்திருப்பவர் சினேகா பார்த்திபராஜா.

திருப்பத்தூரைச் சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞர். இந்தியாவில் முதன்முதலாக மதம், ஜாதியற்றவர் என்று தனக்கு ஜாதி மறுப்புச் சான்றிதழ் வாங்கியவர். இதற்காகப் பல ஆண்டுகள் போராடி அதைப் பெற்றவர்.

படத்தின் நாயகனாக நடித்துள்ளவர் அபுதாகிர். இவர்கள் தவிர சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன், தனபால், தொல்காப்பியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரா.மு.சிதம்பரம் இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “முந்தைய ‘அவள் அப்படித்தான்’ படத்தின் நாயகியின் பெயர் மஞ்சு. இதிலும் நாயகியின் பெயர் மஞ்சுதான். அவள் ஓர் ஆசிரியை. குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியை அவள் வேலையாக இல்லாமல் விருப்பமாகச் செய்து வருகிறாள்.

ஒரு சனிக்கிழமையன்று வேலைக்குச் செல்கிற அவள், வழக்கம்போல அன்று மாலை வீடு திரும்பவில்லை. இரவு 10 மணி ஆகியும் வீடு வந்து சேரவில்லை. அதற்கு மேல் நகரும் ஒவ்வொரு நிமிடமும் அந்தக் குடும்பத்தினருக்குப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

கணவர், மாமியார், செய்தி கேட்டு வந்திருந்த அவளின் பெற்றோர் என அனைவரும் செய்வதறியாது தவிக்கிறார்கள். அக்கம் பக்கம் செய்தி பரவுகிறது. கணவன் எவ்வளவோ இடங்களுக்கு அலைந்து சென்று தேடியும் மனைவி கிடைக்கவில்லை. பொழுதும் விடிகிறது. அதிகாலை 6 மணிக்கு அவள் வந்து சேர்கிறாள்.

Aval Appadithan 2 Story

இரவு முழுக்க எங்கே சென்றிருந்தாள்? அனைவர் முகத்திலும் இதே கேள்விக் குறிகள். ஆனால் எதற்கும் பதில் அளிக்காமல் அனைவரையும் கடந்து, அவர்களது கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைகிறாள்.

இரவு பொழுது கழிந்ததைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் மிகச் சாதாரணமாக இருக்கிறாள். இதைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சி ஆச்சரியம். அதற்குப் பிறகு அவளுக்கும் அவள் கணவருக்கும் ஈகோ யுத்தம் தொடங்குகிறது.

ஆணவம் தூண்டப்பட்ட இரு மனங்களும் கூர் தீட்டிக் கொண்டு மோதிக் கொள்கின்றன. வழக்கமான ஆணாதிக்க மனம் கொண்ட அவனும் அதற்குப் பணியாத அவளும் முரண்பட்டு விலகல் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கு வீடு வந்தவள் மறுநாள் திங்கட்கிழமை காலை ஒரு முடிவு எடுக்கிறாள். அது கட்டுப் பெட்டித்தனமும் அல்ல. கட்டுடைத்தலும் அல்ல. தனது பெண் என்கிற சுயத்தை இழக்காமல் எடுக்கும் முடிவு.

அதற்குள் என்ன நடக்கிறது? அவள் என்ன முடிவெடுக்கிறாள்? என்பதுதான் இப்படத்தின் கதை செல்லும் பாதை.

மனித மனம் ஆணவத்தின் சீண்டல்களால் வெளிப்படும் குரூர தருணங்களையும் அதன் அசைவுகளையும் இந்தப் படத்தில் அழகாகக் காட்டியுள்ளோம். நடித்துள்ளவர்களும் பாத்திரங்களின் மன இயல்புகளை நடிப்பாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

இந்தப் படத்தை நாங்கள் பத்தே நாளில் எடுத்து முடித்தோம். சரியான திட்டமிடல் இருந்ததால் இது சாத்தியமானது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது” என்றார் இயக்குநர் ரா.மு.சிதம்பரம்.

இராமானுஜம்

கனமழை : மாணவர்களுக்கு அரைநாள் விடுப்பு!

அமைச்சராகும் உதயநிதி: இலாக்காவை இழக்கப்போகும் அமைச்சர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *