‘சைத்தான்’, ‘டேவிட்’, ‘வாஷிர்’, ‘ஷோலோ’ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”.
டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் படம் குறித்து இயக்குநர் பிஜோய் நம்பியார்,
“போர்” திரைப்படம் ஒரு நேரிடையான தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்பதற்கான என்னுடைய மூன்றாவது முயற்சி ஆகும். ஷோலோ திரைப்படத்தையும் அந்த எண்ணத்தில் தான் உருவாக்கினேன்.
ஆனால் அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போயிற்று. பந்த் போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் வந்து அதை தடை செய்துவிட்டது.
இரண்டு மொழிகளிலும் இப்படம் எடுக்கப்பட்டாலும் கதையில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு மொழிகளிலும் ஒரே கதை தான்.
அர்ஜூன் தாஸுக்கு சண்டைக் காட்சியில் அடிபடும் போது நாங்கள் பாண்டிச்சேரியில் சூட்டிங்கில் இருந்தோம். அடிபட்டவுடன் சூட்டிங்கை நிறுத்திவிட்டு, சென்னை சென்றுவிடுவோம் என்று தான் முடிவு செய்தோம்.
ஆனால் அவர் என்னிடம் வந்து தனியாகப் பேசினார். சூட்டிங்கை நிறுத்தினால் தேவையில்லாத பண இழப்புகள் தோன்றும். எனக்கு ஒன்றும் பெரிய அடியில்லை; சூட்டிங்கை முடித்துவிட்டுத் தான் செல்கிறோம் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
அவரது அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது.”போர்” கல்லூரி தொடர்பான கதை என்றாலும் கூட ஏன் போர் என்கின்ற தலைப்பை தேர்வு செய்தோம் என்பது சுவாரஸ்யமானது.
“பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஒரு போர்க்களக் காட்சியில் சண்டைக்காட்சி இயக்குநர் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக வந்த தெலுங்கு நடிகர் நடிகைகளிடம் மைக்கில்,
‘இது போர், போர், போர்” அந்த முகபாவனையுடன் நில்லுங்கள், இது போர் போர்” என்று சத்தமாகக் கத்திக் கொண்டிருந்தார்.
எனக்கு அது மனதில் பதிந்துவிட்டது. உடனே என் நண்பரைக் கூப்பிட்டு அந்த டைட்டிலை பதிவு செய்யச் சொன்னேன். இரண்டு எதிர் எதிர் கதாபாத்திரத்தின் யுத்தத்திற்கு ”போர்” என்கின்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது”, என்றார்.
நாயகன் அர்ஜூன் தாஸ் படத்தில் நடித்தது குறித்து,”போர்” திரைப்படம் ஒரு கல்லூரி கால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்.
கொண்டாட்டத்திற்கான திரைப்படம், நட்பும் படத்தில் சிறிய அளவில் இருக்கிறது. வேறு வேறு விதத்திலான உணர்வுகள் படத்தில் கொட்டிக்கிடக்கிறது.
காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் படப்பிடிப்பு தளத்தில் டேக் செல்வதற்கு முன்பு வரை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான். ரொம்பவே சேட்டை செய்வான். மற்றபடி மிகச்சிறந்த நண்பன். காளிதாஸ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் மகிழ்ச்சியானது”, என்றார்.
-ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுகவில் இரண்டு அதிரடி மாற்றங்கள் : பின்னணி என்ன?
‘எந்த தொகுதியில் போட்டி?’ : உறுதி செய்த திருமாவளவன்
இந்த இடங்களுக்கு ‘மழை நிச்சயம்’ வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுகவில் இணையும் 2 பாஜக எம்.எல்.ஏ-கள்? – ட்விஸ்ட் வைத்த அதிமுக எம்.எல்.ஏ