ரஜினியின் இரண்டு படங்களுக்கு இசையமைக்க அனிருத் ரூ. 10 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பில் 2014 ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளியான கத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லைகா புராடக்ஷன்ஸ் இதுவரை 15 திரைப்படங்களை நேரடியாக, கூட்டு தயாரிப்பாக, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிட்டுள்ளது.
இதுவரை எந்தவொரு படமும் பன்மடங்கு லாபத்தை இந்த நிறுவனத்திற்கு கிடைக்க காரணமாக இருக்க வில்லை.
கடந்த செப்டம்பர் 30 அன்று வெளியான பொன்னியின் செல்வன்” படம் மூலமாக தற்போது பல மடங்கு லாபத்தை பெற்றுள்ளது லைகா நிறுவனம்.
முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பதற்காக நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், தனுஷ், சூர்யா, நயன்தாரா ஆகியோருக்கு அவர்கள் நடிக்கும் படங்களின் வணிக மதிப்புக்கு சம்பந்தமில்லாமல் அதிகமாக சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்கின்றனர்.
இதனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன் தொழில் தெரிந்த மற்ற தயாரிப்பாளர்கள் அவர்களை போன்று அதிக சம்பளம் கொடுக்க முடியாமல், விருப்பமில்லாமல் தயாரிப்பு தொழிலில் இருந்து ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்கிறது சினிமா வட்டாரம்.
அதுபோன்று அனிருத் கேட்ட சம்பளத்தை கேட்டு லைகா நிறுவனம் அதிர்ந்து போனதுதான் கோடம்பாக்க சினிமாவில் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர், ரஜினிகாந்த் உறவினர், முன்னணி கதாநாயகர்களால் பரிந்துரை செய்யப்படும் இசையமைப்பாளராக அனிருத் வளர்ந்திருக்கிறார்
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்கள் உட்பட தமிழின் முக்கியமான கதாநாயகர்கள் படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறார்.
இப்போது, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்- 2, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்,
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.
ஒரு படத்துக்கு இசையமைக்க அனிருத் மூன்று கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார்.
அண்மைக்காலமாக அவர் இசையமைத்த படங்கள் வெற்றி பெற்றன என்பதாலும் பாடல்கள் வரவேற்புப் பெற்றன என்பதாலும் தன் சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
இப்போது லைகா நிறுவனம் ரஜினிகாந்த்தை வைத்து இரண்டு புதிய படங்களைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
அவற்றில் ஒரு படத்தின் தொடக்கவிழா நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில் இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைக்க வேண்டும் என்று அவரை அணுகியிருக்கிறார்கள்.
அவரோ இப்போது என் சம்பளத்தை உயர்த்திவிட்டேன், ஒரு படத்துக்கு ஐந்து கோடி சம்பளம், இரண்டு படங்களுக்கும் சேர்த்து பத்து கோடி சம்பளம் என்றால் இசையமைக்கிறேன் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்.
இதைச் சற்றும் எதிர்பாராத லைகா நிறுவனத்தினர் அதிர்ச்சியடைந்துவிட்டார்களாம். வேறு இசையமைப்பாளர்களை தேடி செல்வதை காட்டிலும் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பளத்தை குறைக்க செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறதாம் லைகா நிறுவனம்.
இராமானுஜம்