கடந்த 8 ஆண்டுகளில் 10 முறை நடிகர் அஜித் குமாரை சந்திக்க முயற்சி செய்து முடியாமல் போனதாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
பிரேமம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். கடந்த 10 ஆண்டுகளில் இவர் 4 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
அஜித் குமார் ரசிகர் ஒருவர் அல்போன்ஸ் புத்திரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் குமாருடன் சேர்ந்து அவர் படம் இயக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

அவருக்கு பதிலளித்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், “அஜித் குமார் சாரை நான் இதுவரைக்கும் சந்திக்க முடியவில்லை.
நிவின் பாலியை அஜித்குமார் தொடர்பு கொண்டு பிரேமம் படம் மற்றும் அதில் இடம்பெற்ற பாடல் நன்றாக இருக்கிறது என்று கூறியதாக நிவின் பாலி என்னிடம் கூறினார்.
அதன் பிறகு நான் அவரை சந்திக்க கடந்த 8 ஆண்டுகளில் 10 முறை அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு சந்திப்பை ஏற்படுத்த கேட்டுக்கொண்டேன்.
வயதாவதற்குள் அவரை பார்க்க முடிந்தால் அவருடன் நான் நல்ல படம் பண்ணுவேன். ஒவ்வொரு முறையும் இது போன்ற கேள்வி என்னிடம் கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும். நான் தொடர்ந்து முயற்சி செய்து நொந்து போய்விட்டேன்.
நீங்கள் இந்த கேள்வியை கேட்கும் போது எனக்கு முதலில் கோபம் வரும். அதற்கு பிறகு நீங்களும் என்னை மாதிரி ஒரு அஜித் ரசிகனாக இருக்கலாம் என்று பார்க்காத மாதிரி சென்று விடுவேன். நான் அஜித்குமாரை வைத்து படம் இயக்கினால், அந்த படம் குறைந்தபட்சம் 100 நாட்களாவது திரையரங்குகளில் ஓடும். சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தளபதி போன்றவர்களை வைத்து படம் இயக்கினாலும் அப்படித்தான்.
இந்தப் படங்களுக்குத் தேவைப்படும் பணத்துடனும் அன்புடனும் என் படத்தை நான் விரும்பும் வழியில் இயக்க 100 சதவீதம் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். அப்போது நான் சரியான இயக்குனரா இல்லையா என்பதை நீங்கள் பார்க்கலாம்.” என்று பதிவிட்டுள்ளார். அல்போன்ஸ் புத்திரனின் இந்தப் பதிவை சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
செல்வம்
தை அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்!
டிஜிபி மாநாடு: சைலேந்திர பாபுவுக்கு ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்!