நடிகை தற்கொலை: முன்னாள் காதலர் கைது!

Published On:

| By Monisha

பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை வைஷாலி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது முன்னாள் காதலரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசித்து வந்த நடிகை வைஷாலி சசுரால் சிமர் கா, சூப்பர் சிஸ்டர், மன்மோகினி 2 போன்ற இந்தி தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமடைந்தார்.

இவரது குடும்பத்தினர் வைஷாலியின் திருமணத்திற்காகத் தொடர்ந்து வரன் தேடி வந்துள்ளனர். ஆனால் வைஷாலிக்கு திருமணம் நடக்கவில்லை.

இந்நிலையில் நடிகை வைஷாலி கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

actress vaishali sucide

பின்னர் வைஷாலி அறையை சோதனை செய்த போலீசார் கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர். அதில், தான் சில காலமாக மன அழுத்தத்திலிருந்து வந்ததாகவும் தனது முன்னாள் காதலரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதில் முன்னாள் காதலரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இவருக்குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அபிநந்தன் என்பவருடன் நிச்சயம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைத்தள ரசிகர்களுடன் பகிர்ந்துள்ள வைஷாலி, வருங்கால கணவர் கென்யா நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்குப் பின்னர், ’அபிநந்தனை திருமணம் செய்யப்போவதில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இதனால் கடந்த ஜூன் மாதம் நடக்க இருந்த இவர்களது திருமணமும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளத்திலிருந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோவையும் நீக்கியிருந்தார்.

இந்த நிலையில், வைஷாலியை தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் முன்னாள் காதலரான ராகுல் நவ்லானி மற்றும் அவரது மனைவி திஷா மீது வழக்குப் பதிவாகி உள்ளது. அண்டை வீட்டில் வசித்து வந்த ராகுலை இந்தூரில் வைத்து போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

actress vaishali sucide

தொழில் அதிபர் ராகுல் கடந்த காலத்தில் வைஷாலியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்துள்ளார். இதனையடுத்து வைஷாலிக்கு திருமணம் நடக்கவிடாமல் தடுப்பதற்காக அவரை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இது குறித்துக் காவல் ஆணையர் ஹரி நாராயணாச்சாரி மிஷ்ரா கூறுகையில், ”வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பு, ராகுல் காணாமல் போய் விட்டார். பின்னர் அவரை வைஷாலி வீட்டிற்குப் பக்கத்து வீட்டிலிருந்து இன்று கைது செய்துள்ளோம்.

ராகுல் – வைஷாலி தொடர்பு பற்றி நடிகையின் குடும்பத்தினருக்குத் தெரியும். வைஷாலி பற்றி ராகுலே வதந்திகளைப் பரப்பியுள்ளார் என குடும்பத்தினர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.

மணமகனாக வருபவர்களிடம், தன்னுடனான தொடர்பு பற்றி கூறியும், வைஷாலியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியும் வந்துள்ளார். இதனாலேயே பல் மருத்துவருடனான திருமணம் ரத்து செய்யப்பட்டது.

வேறு யாருடனாவது திருமணம் செய்து வைக்க வைஷாலி குடும்பத்தினர் முயலும்போதும், இதே வேலையில் ராகுல் ஈடுபட்டு உள்ளார்” என்று கூறினார்.

வைஷாலி தற்போது ரக்சாபந்தன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ”கனக் சிங்சால் சிங் தாக்கூர்” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

மோனிஷா

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு!

போதையில் இருப்பவருடன் பயணித்தாலும் இனி அபராதம்: அமலுக்கு வந்தது புதிய விதி!