சத்யஜித்ரே இயக்கத்தில் வெளியான பதர் பாஞ்சாலி படத்தில் சிறுமியாக நடித்த உமா தாஸ் குப்தா புற்று நோய் காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 84.
கடந்த 1954 ஆம் ஆண்டு சத்யஜித்ரே இயக்கத்தில் பதர் பாஞ்சாலி படம் வெளியானது. இந்த படத்தில் துர்கா என்ற கதாபாத்திரத்தில் உமா தாஸ் குப்தா நடித்தார். அப்போது, அவருக்கு வயது 14 தான் ஆகியிருந்தது. மாணவியாக பள்ளியில் நாடகம் ஒன்றில் உமா நடித்த போது, அதை கண்டு சத்யஜித்ரே வியந்து போனார்.தொடர்ந்து, உமாவின் குடும்பத்தோடு பேசி அவரை பதர் பாஞ்சலி படத்தில் நடிக்க வைத்தார்.
பதர் பாஞ்சாலி படத்தில் உமாவின் நடிப்பு கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, பல படங்களில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உமா நடிக்கவில்லை. அந்த ஒரே படத்தோடு தனது சினிமா வாழ்க்கையை முடித்து கொண்டார். பின்னர், பள்ளி ஆசிரியையாக தனது வாழ்க்கையை தொடர்ந்தார்.
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு உமாவுக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (நவம்பர் 18) அவர் உயிரிழந்தார்.
உமா குறித்து சத்யஜித்ரேவின் மகன் சந்திப் ரே கூறுகையில், “எனது தந்தை உமா குறித்து என்னிடம் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். கேமரா முன்னால் அவ்வளவு இயல்பாக நடிப்பார். டேக் எடுக்க மாட்டார். கரெக்ஷன் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. நானும் பல நேரங்களில் அவரை சந்தித்துள்ளேன். ஆனால், அந்த படத்துக்கு பிறகு அவர் ஏன் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று தெரியவில்லை” என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்