வழிப்பறி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நடிகை ரியா குமாரி வழக்கில், திடீர் திருப்பமாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட்டைச் சேர்ந்த நடிகை ரியா குமாரி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், வழிப்பறி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரியா குமாரி தனது கணவர் பிரகாஷ் மற்றும் 2 வயது மகளுடன் கொல்கத்தாவில் இருந்து ராஞ்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது பக்னான் என்ற இடத்தில் அவருடைய காரை மூன்று பேர் வழிமறித்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் இருந்த பணம், நகை, செல்போன் உள்ளிட்டவற்றை கேட்டபோது ரியா குமாரி பொருட்களை தர மறுத்ததால், அவரை துப்பாக்கியில் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்டது.
பின்னர் ரியா குமாரியின் கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகையை கொன்று வழிப்பறி செய்து தப்பி சென்ற மூன்று கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் ரியாகுமாரியின் கணவர் பிரகாஷ் மீது சந்தேகம் உள்ளதாக ஹவுரா போலீசில் அவரது சகோதரர் புகார் அளித்தார்.
இரண்டாவது மனைவியான ரியாகுமாரியை அடிக்கடி வரதட்சணை கேட்டு பிரகாஷ் துன்புறுத்தி வந்ததாகவும்,
தனது சகோதரியின் இன்சூரன்ஸ் பணம் மற்றும் வங்கிக்கணக்கில் உள்ள லட்சணக்கணக்கான பணத்தை அபகரிக்க கொலை செய்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீஸ் ரியாகுமாரியின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆனால் பிரகாஷ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தனக்கு 2 வயதில் பெண் குழந்தை இருக்கும்போது என் மனைவியை நானே எப்படி கொல்ல முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலை.ரா