போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் உட்பட 5 பேர் தெலுங்கானா மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் இன்று (ஜூலை 15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் சைபராபாத்தில் 2.6 கிலோ எடைகொண்ட கொக்கைன் போதைப்பொருள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டதை மாநில போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து ஹைதர்ஷாகோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாநில போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் ராஜேந்திர நகர் SOT (Special Operation Team) போலீஸார் கூட்டாக சேர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் இருந்து 2.6 கிலோ கொக்கைன் கைப்பற்றப்பட்டு, இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போதைக்கும்பலிடம் இருந்த வாடிக்கையாளர்கள் பட்டியலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். அதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் உட்பட 5 பேரின் பெயர் இருந்தது.
இதனையடுத்து அமன் ப்ரீத் சிங், அனிகேத் ரெட்டி, பிரசாத், மதுசூதன் மற்றும் நிகில் தமன் ஆகிய 5 பேரை தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
தற்போது அவர்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து ராஜேந்திர நகர் மண்டலத்தின் சைபராபாத் போலீஸ் டி.சி.பி ஸ்ரீநிவாஸ் கூறுகையில், “நுகர்வோர் என்ற முறையில், ஐந்து பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், அனைவரும் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நுகர்வு வழக்கு தொடர்பாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. கடந்த ஆண்டும் இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்டது.
போதைப்பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங் தவிர, நடிகர்கள் ராணா டகுபதி, நவ்தீப், இயக்குநர் ரவி தேஜா மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
‘சண்டாளர்’ சாதி பெயரை பயன்படுத்த கூடாது : பழங்குடியின ஆணையம்!