எல்லோரும் பணத்திற்காக வேலை பார்க்கிறார்கள், நானும் அதற்காக வேலை செய்வதில் தவறு எதுவும் இல்லை என்று நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துப் பிரபலமானார்.
தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கடைக்குட்டி சிங்கம், மாபியா, ஓ மணப்பெண்ணே, மான்ஸ்டர், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடித்துள்ள அகிலன், இந்தியன் 2, ருத்ரன், பத்து தல போன்ற படங்கள் இந்தாண்டு வெளிவர உள்ளன.
இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, “தமிழில் நடிக்க வந்த போது என்னுடைய எதிர்காலம் குறித்து பெரிய திட்டம் எதுவும் தீட்டவில்லை. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்றெல்லாம் கவலைப் படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதனால் தான் நடிக்க வந்தேன்” என்று கூறியிருந்தார்.
இதனால் பிரியா பவானி சங்கர் பணத்திற்காக மட்டும் தான் நடிக்க வந்தாரா? என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதற்குப் பதிலளித்து நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாராம் என்ற மோட்-ல் ஊடகங்கள் இருக்கின்றன. நான் கூறியதன் ஆதாரத்தை அறிய விரும்புகிறேன். நான் இதற்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை.
ஆனால் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நான் இதைச் சொல்லவே இல்லை. அப்படிச் சொல்லியிருந்தாலும், இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
எல்லோரும் பணத்திற்காகத் தான் வேலை பார்க்கிறார்கள். நானும் பணத்திற்காகத்தான் வேலை பார்க்கிறேன். பணத்திற்காக வேலை செய்யாதவர்கள் யார்? ஆனால் ஒரு நடிகர் என்றால் மட்டும் அது மிகவும் மலிவான ஒன்றாக மாறிவிடுகிறது.
நான் என் வழியில் முன்னேறிவிட்டேன். மலிவான விமர்சனங்களை அனுமதிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
”மத ரீதியான பாகுபாடு கேவலம்!” – நடிகை சனம் ஷெட்டி அதிருப்தி
“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” – குதிரை ஓட்டிய அன்பில் மகேஷ்