சின்னத்திரை நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ் நேரில் ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
தமிழில் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை திவ்யா. இவர் மகராசி, செவ்வந்தி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கும் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் நைனா முகமத் என்ற அர்ணவ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. கேளடி கண்மணி சீரியலில் இருவரும் ஒன்றாக நடித்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் காதலித்து வந்த இருவரும் கடந்த ஜூன் மாதம் சென்னை வடக்கு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். அர்ணவ் முஸ்லீம் என்பதால் மதம் மாறி திவ்யா அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர். தற்போது திவ்யா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்தநிலையில் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட திவ்யா, கணவர் அர்ணவ் மீது பரபரப்பு புகாரை தெரிவித்தார்.
“அர்ணவிற்கு வேறு ஒரு நடிகையுடன் பழக்கம் உள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அரணவ் தன்னை அடித்து தள்ளி விட்டதால் கர்ப்பம் கலையும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.
அதேவேளையில் நடிகர் அர்ணவும் ஆவடி காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில், ’திவ்யாவுக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. விவகாரத்து பெறாமலே தன்னை திருமணம் செய்து கொண்டார்’ என்று தெரிவித்திருந்தார்.
மூன்று மாத கருவில் உள்ள குழந்தையை கலைப்பதற்கு திட்டமிட்டு இந்த நாடகம் நடத்துவதாக புகாரில் தெரிவித்திருந்தார்.
கணவன் மனைவி இருவருக்கும் நண்பரான ஈஸ்வரன் தான் இந்தப் பிரச்சனைக்கு காரணம். எனக்கும் என் மனைவிக்கும், எவ்வித பிரச்சனையும் இல்லை. அவர் கீழே விழுந்ததாக கூறும் நேரத்தில் நான் வீட்டிலேயே இல்லை என்றும் அர்ணவ் கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த திவ்யா, கணவரின் சில ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.
திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதில் இருந்தே அர்ணவ் தன்னிடம் பிரச்சினை செய்வதாகக் கூறினார்.
அதேபோன்று அர்ணவும் திவ்யாவின் வீடியோவை வெளியிட்டார். இப்படி மாறி மாறி இருவரும் புகார் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் மனைவி திவ்யாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இப்படி நடந்துக் கொள்வதாகக் கூறிய அர்ணவ், அவரும் தன் குழந்தையும் வேண்டும் என்றும் பல்டி அடித்துள்ளார்.
இதை ஏற்றுக்கொள்ளாத திவ்யா, 45 நாட்கள் ஒரே வீட்டில் இருந்தும் அர்ணவ் தன்னிடம் பேசவில்லை என்றும், தன் மீதும் தன் குழந்தை மீதும் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவர் பேச்சை நம்பமாட்டேன் என்றும் கூறினார்.
இந்நிலையில், ஏற்கனவே நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் நடிகர் அர்ணவ் மீது 3 வழக்கு பதியப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அர்ணவ் வரும் 14 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் போலீசார் இன்று(அக்டோபர் 12) சம்மன் அனுப்பி உள்ளனர்.
கலை.ரா
மணிரத்னத்துடன் இணையும் படம் : குழப்பத்தில் ரஜினி?
பெண்கள் நரபலி வழக்கு : நெஞ்சை பதற வைக்கும் வாக்குமூலம்!