தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு ரூ.63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசுக் காரை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருந்தார்.
இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில், நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என கோர்ட் தெரிவித்தது இதனை தொடர்ந்து விஜய் தரப்பில் ரூ.7,98,075 நுழைவு வரி செலுத்தப்பட்டது.
ஆனால் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.30 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை வணிகவரித்துறை அபராதமாக விதித்தது.
இதனை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்த நிலையில், நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு கடந்த 2019 ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது எனவும் 2019 ஜனவரிக்கு பின் வரியை முழுமையாக செலுத்தாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கலாம் என வணிகவரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்துடன் சேர்த்து நுழைவு வரியை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளையும் உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.