ஜெய்பீம் திரைப்படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன் கூடிய திரைக்கதை புத்தகத்தின் அட்டைப்படத்தை நடிகர் சூர்யா இன்று(ஜனவரி 5) வெளியிட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய திரைப்படம் ‘ஜெய் பீம்’.
ஜெய் பீம் படத்திற்கு வரவேற்பு
ராஜாக்கண்ணு, செங்கேணி என்ற இருளர் இன தம்பதிகள், உயர் சாதியினரால் அடக்குமுறைக்கு ஆளாகியதையும், செய்யாத குற்றத்திற்காக சிறையில், சட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் உண்மைக்கு அவ்வளவு நெருக்கமாக காட்டியது ஜெய் பீம்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், ரஜிசா விஜயன் ஆகியோரின் எதார்த்தமான நடிப்பும் படத்திற்கு வலுவூட்டியது.
விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் சைமா, பிலிம்பேர், மெல்போர்ன் பிலிம் பெஸ்டிவல், கோல்டன் எல்ம் விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை அள்ளியது.
ஆஸ்கர் ரேஸிலும் இணைந்த ஜெய் பீம், இறுதிப் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை. உலகளவில் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சிக்காக சர்ச்சையையும் கிளப்பியது.
சூர்யா வெளியிட்ட ஜெய் பீம் அட்டைப்படம்
திரைப்படம் வெளியாகி ஓராண்டு கடந்த நிலையில் தற்போது ’ஜெய் பீம் புத்தகம்’ குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
எழுத்தாளரும், அருஞ்சொல் ஆசிரியருமான சமஸ், ஜெய் பீம் திரைப்படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன் படத்தின் திரைக்கதையை புத்தகமாக எழுதியுள்ளார்.
இந்தாண்டு நடைபெற இருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் கிடைக்க உள்ளது. இந்நிலையில் ஜெய் பீம் புத்தகத்தின் அட்டை புகைப்படத்தை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். ”ஜெய் பீம் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் உரையாடலுடன் படத்தின் திரைக்கதையை நூலாகக் கொண்டு வந்திருக்கிறார் அருஞ்சொல் ஆசிரியர் சமஸ்.
2டி எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து 2023 சென்னை புத்தகக்காட்சிக்குக் கொண்டுவரும் ஜெய் பீம் நூலின் அட்டையை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டாஸ்மாக் நேரத்தை மாற்றியமைக்க நீதிபதிகள் பரிந்துரை!
டிஜிட்டல் பயணத்தில் இந்தியாவுக்கு உதவுவோம் : மைக்ரோசாஃப்ட் சிஇஓ!