ஆஸ்கர் வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண குறும்படத்தில் தோன்றிய யானை ரகுவின் உயிரை, நடிகர் சிவகார்த்திகேயன் காப்பாற்றிய செய்தி வெளியான நிலையில் அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த 95வது அகடமி விழாவில் கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்கிற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய தயாரிப்பு மற்றும் முதல் இந்திய ஆவணப்படம் என்ற பெருமையை ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முதுமலையில் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரகு என்ற கைவிடப்பட்ட குட்டியானைக்கும்,
அதனை குழந்தைப்போல் வளர்த்த பொம்மன், பெல்லி என்ற பழங்குடி தம்பதியினருக்கும் இடையேயான ஆழமான பிணைப்பை எடுத்துக்காட்டியது.
இந்த ஆவணப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ள யானை ரகு, குட்டியாக இருந்தபோது உயிர்பிழைத்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய காரணம் வகித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மின்வேலியில் சிக்கி தனது தாய் உயிரிழந்த நிலையில், குட்டியானை ரகு நாய்களால் கடிக்கப்பட்டு உடல் முழுவதும் ரத்தம் வடிந்த நிலையில் ஓசூர் அருகே சுற்றி திரிந்தது.
அதனை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் முதுமலை யானை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
பலத்த காயம்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய குட்டி யானை ரகுவுக்கு சிகிச்சையளிக்க விலையுயர்ந்த மருந்துகள் தேவைப்பட்டன.
அச்சமயத்தில் ஒரு வனவிலங்கு அறக்கட்டளை மூலம் இதனையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் யானையின் மருத்துவ தேவைகளுக்காக உடனடியாக நிதி உதவி அளித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து படிப்படியாக உடல்நலம் தேறி இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது ரகு.
சிவகார்த்திகேயன் செய்த இந்த உதவி இதுவரை வெளியே யாருக்கும் தெரியாது. ரகு இடம்பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படம் ஆஸ்கர் வென்றதன் மூலம் தற்போது இது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை ’வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை’ நிறுவனர் என். சாதிக் அலி சமீபத்திய ஆங்கில பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த மனிதநேயமிக்க செயலை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2021ம் ஆண்டு முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு பிரகுர்த்தி என்ற பெண் யானையையும் மற்றும் விஷ்ணு என்ற ஆண் சிங்கத்தையும் தத்தெடுத்து அவர் வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
சாமோசா விற்று ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் தம்பதி!
ஆளுநர் அலட்சியமாக இருக்க கூடாது: சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்றம்!