இந்திய சினிமா நடிகர்களில் அரசியல், சினிமா, பொது நலன் சார்ந்தவற்றில் பகிரங்கமாக தனது கருத்தை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிடுவது நடிகர் சித்தார்த்தின் வழக்கம்.
சமீப காலங்களாக இது போன்ற பதிவுகளை சித்தார்த் பதிவிடுவதில்லை. அதற்கு காரணம் என்ன என்பதை சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் சித்தார்த்.
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷின் எழுத்து, இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நாயகன் சித்தார்த் பேசும்போது, “கோவிட் காலத்துக்கு பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். ‘டக்கர்’ பட இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது. எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது.
’டக்கர்’ என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட, தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் ‘போட்டி’, சில ஊர்களில் ‘ஸ்மார்ட்’டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள். ‘மோதல்’, ‘சூப்பர்’ என மேலும் பல அர்த்தங்களும் இந்த டக்கர் என்ற வார்த்தைக்கு உண்டு.
இந்தப் படத்தில் இந்த ‘டக்கர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதன் காரணம், மோதல் என்ற அர்த்தத்தில்தான்..! ஒரு பொண்ணுக்கும், ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது.
சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்குப்பட்டது. ’குஷி’ போல காதலர்களுக்குள் வரும் பிரச்சினையா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்வேன். பணக்காரனாக வேண்டும். ஆனால், அது முடியவில்லை எனும்போது இளைஞர்களுக்கு வரும் கோவம்தான் கதாநாயகனுக்கும். ’
உங்களை இதுவரை சாஃப்ட்டாகதான் பார்த்திருப்பார்கள். இதில் ரக்கட்டாக பார்த்தால் வித்தியாசமாக இருக்கும்’ என இயக்குநர் சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை எடுத்தோம்.
ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என என்னை நானே பாராட்டும் அளவுக்கு நன்றாக செய்திருக்கிறேன். இந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்தான். நடிகர் யோகிபாபு, கதாநாயகி திவய்ன்ஷா, சீனியர் ஹீரோ அபிமன்யு, முனீஷ் காந்த், விக்னேஷ் காந்த் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
‘உடலுறவு வேண்டுமனால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம் வேண்டாம்’ என கதாநாயகி டிரைய்லரில் பேசும் வசனம் அனைவரையும் மிரட்டி போட்டுவிட்டது. யூ டியூப் கமெண்டிலேயே இது தொடர்பாக நிறைய விவாதங்கள். இந்த கதாநாயகி, கதாநாயகனை சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதும் ‘டக்கர்’ரில் இருக்கும்.

’டக்கர்’ திரைப்படம் திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட கமர்ஷியல் படம். நண்பர்களோடு, குடும்பத்தோடு நீங்கள் ஜாலியாக பார்க்கலாம். நிச்சயம் உங்களை இந்த ‘டக்கர்’ ஏமாற்றாது. இந்த சம்மரில் வெளியாகும் படங்களில் ‘டக்கர்’ நிச்சயம் தனி இடத்தைப் பிடிக்கும்.
வரும் ஆகஸ்ட் மாதம் வந்தால் ‘பாய்ஸ்’ படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நிறைய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தேன். இப்போது என்னை நம்பி இவ்வளவு படங்கள், தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகி விட்டேன்.
சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து உழைக்கிறேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிஸ்கஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நடிக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மணிரத்னத்திடம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை.” இவ்வாறு சித்தார்த் பேசினார்.
இராமானுஜம்
சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம்: முதல்வர் கண்டனம்!
கேரளாவில் ரயிலுக்கு தீ வைப்பு: போலீஸ் விசாரணை!