ட்விட்டர் கணக்கு விதிமீறலால் முடக்கம் செய்யப்படவில்லை என்று நடிகர் கிஷோர் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா படத்தில் வனத்துறை அதிகாரி முரளிதர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் குமார் நடித்திருந்தார்.
இவர் 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன் சமூக பிரச்சனைகள் குறித்த வெளிப்படையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கிஷோர் குமாரின் ட்விட்டர் கணக்கு சில தினங்களுக்கு முன்பு முடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் கிஷோர் குமாரின் ட்விட்டர் கணக்கைத் தேடினால், ”ட்விட்டரின் விதிகளை மீறியதற்காக இந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது” என்று காட்டியது.
கிஷோர் குமார் வெளிப்படையான கருத்துக்களை வெளியிடுவதால் தான் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதற்கு கிஷோர் குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், “எனது ட்விட்டர் கணக்கை முடக்கியது குறித்து தேவையற்ற தவறான எண்ணங்களைத் தவிர்க்க வேண்டும். எனது பதிவுகளின் காரணமாக என்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்படவில்லை.
டிசம்பர் 20, 2022 அன்று எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இது தான் எனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்குக் காரணம் என்று தெரிந்து கொண்டேன்.
ட்விட்டர் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. அனைவரது அக்கறைக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவுடன், ட்விட்டர் அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
மோனிஷா
காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்!
நீலகிரி: உறைய வைக்கப்போகும் பனி