‘புஷ்பா 2’ பார்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… அல்லு அர்ஜூன் செய்த உதவி!

Published On:

| By Selvam

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

டிசம்பர் 4-ஆம் தேதி இரவு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் பிரிமியர் ஷோ  திரையிடப்பட்டது.

படத்தைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கு முன்பு குவிந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வேளையில், அல்லு அர்ஜூன் சர்ப்ரைஸாக திரையரங்குக்கு எண்ட்ரி கொடுத்தார்.

இதனால் அல்லு அர்ஜூனுடன் செல்ஃபி எடுப்பதற்காக கூட்டம் முண்டியடித்தது. இதனால் கூட்ட நெரிசல் எற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் தில்சுக்நகரைச் சேர்ந்த ரேவதி (வயது 39) என்பவர் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீ தேஜ் (வயது 9) படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தநிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சந்தியா தியேட்டரில் நடந்த சோகமான சம்பவத்தால் மிகுந்த மனவேதனையடைந்தேன். இந்த இக்கட்டான தருணத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களது துக்கத்தில் பங்கெடுப்பதற்காக, அந்த பெண்ணின் குடும்பத்தை விரைவில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி கொடுக்க இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “குடும்பங்கள் கொண்டாடும் நல்ல பொழுதுபோக்கு சினிமாவை வழங்குவதே எங்களது நோக்கம். தயவு செய்து கவனமாக இருங்கள். படம் பார்த்துவிட்டு பத்திரமாக வீடு திரும்புங்கள்” என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமனம்!

புதிய BS-VI பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : சிவசங்கர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share