மேட்டினிஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் சமூக அக்கறை கொண்டு, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘ஆதாரம்’.
இந்தப் படத்தில் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர், நடராஜன்(கனடா), கதிரேசன், செந்தில் நடராஜன் (கனடா), ராதாரவி, Y.G.மகேந்திரன், கதிரவன் பாலு, கார்த்திக், சக்தி(கனடா) வெங்கடேஷ் ஆறுமுகம்(அசத்த போவது யாரு) தென்காசி நாதன் வினோத் KPY) DR.அமுதா குமார், ஜீவா கார்த்திக், அஷ்வின் சுதந்திரம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மே 22 ஆம் தேதி சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது…
“ஒரு பத்திரிக்கையாளர் வந்தவுடனேயே “நல்ல கண்டண்ட் தாருங்கள்” என்றார். என்ன கண்டண்ட் எனத் தெரியவில்லை. சகோதரி கவிதா என்னை வந்து அழைத்தார். நான் வந்து பேசினால், ஏதாவது திட்டி, அது வைரல் ஆகிவிடுகிறது என்பதால் என்னை எல்லா பங்ஷனுக்கும் அழைத்து விடுகிறார்கள்.
ஆனால் கவிதாவின் முகவரி என்னை இங்கு அழைத்து வந்துவிட்டது. அவரது தந்தை T.N.பாலுவின் படங்களான சங்கர்லால் முதல், பல படங்களுக்கு நான் ரசிகன். அந்தப் படத்தின் பாதிப்பில்தான் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு தொப்பி வைத்தேன்.
தமிழ் சினிமாவில் ‘காப்பி’, ‘காப்பி’ என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது. என் மீதே நிறைய குற்றச்சாட்டு இருக்கிறது. உலகம் முழுக்கவே ஆறு கதைகள்தான். அதுதான் திரும்ப திரும்ப எடுக்கப்படுகிறது. எல்லோருமே ஒரே கதையைத்தான் திரும்ப திரும்ப எடுத்து வருகிறோம்.
கவிதாவை என் மகளாகவே பார்க்கிறேன். அவர் “இது என் முதல் படம். குறைந்த நாளில்தான் எடுத்தேன். அடுத்த படத்தை நன்றாக எடுக்க போகிறேன்” என்றார். அந்த உண்மைக்காகவே அவரைப் பாராட்ட வேண்டும்.
என் முதல் படம் ஏழு நாள் சுமாராகத்தான் ஓடியது. பின் எட்டாவது நாளில்தான் பிக்கப்பாகி ஓடி வெற்றியடைந்தது. தோல்வியிலிருந்துதான் படம் செய்வதை கற்றுக் கொள்ள வேண்டும். நான் ‘லியோ’வில் சின்ன கேரக்டரில்தான் நடித்துள்ளேன்.
சிவகார்த்திகேயன் படத்தில் இப்போதுதான் நடித்து முடித்துள்ளேன். இந்த அப்டேட் எங்கு போனாலும் கேட்கிறார்கள். அதனால் சொல்லிவிட்டேன். இந்தப் படத்தை அனைவரும் கஷ்டப்பட்டு உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ளார்கள். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்…” என்றார்.
ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது…
“நான் நிறைய தப்பு செய்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் நீதிபதி. T.N.பாலு சார் மக்களை நன்கு புரிந்து கொண்ட இயக்குநர். அவரின் வாரிசு இப்படி ஒரு படத்தை எடுப்பதில் ஆச்சர்யம் இல்லை. அவருக்கு தவறு என தெரிந்த விஷயத்தை தைரியமாக சொல்ல நினைத்துள்ளார்.
திரைக்கதை விறுவிறுப்பாக நகருவது படம் பார்க்கும்போது தெரியும். இந்தப் படம் கண்டிப்பாக பல சர்ச்சைகளுக்கு உள்ளாகும். ஆனாலும் இதுவொரு நல்ல, சிறந்த முயற்சிதான். மக்கள் அதற்கு கண்டிப்பாக ஆதரவு தருவார்கள்…” என்றார்.
கதாநாயகி பூஜா பேசும்போது…
“இந்தப் படத்தில் நான் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் என்னை நம்பி எனக்கு இந்த கதாபாத்திரத்தை அளித்த இயக்குநர் கவிதாவிற்கு நன்றி. தயாரிப்பாளர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் எனக்கு ஆர்வமாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி.

பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இது அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்..” என்றார்.
இயக்குநர் கவிதா பேசும்போது…
“இந்த விழாவிற்கு வருகை தந்த இயக்குநர் மிஷ்கின், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர் சரவணன் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
எல்லோர் வீட்டிலும் ஒரு வாலு இருப்பார்கள். என் வீட்டில் வாலாக இருந்தது நான்தான். இது என் முதல் படம். என் தந்தை மறைந்த இயக்குநர் திரு.T.N.பாலு. இதை உரக்க இங்கு சொல்கிறேன். என்னுடைய தந்தை இவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார். யாரும் நம்மை கண்டுகொள்ளவில்லையே என தோன்றியது.
ஆனால் இந்த விழாவிற்கு மிஷ்கின் சார் வந்த காரணம் என் தந்தைதான். ஒய்.ஜி.மகேந்திரன் சார் இந்தப் படத்தில் நடிக்கக் காரணமும் என் தந்தைதான். இந்த பெருமையே எனக்கு போதும்.
எப்போதும் பழையதை மறக்காதீர்கள். புதுப்பித்துக் கொண்டே இருங்கள். என் புரடியூசர் ஒரு பிச்சைக்காரன். ‘பிச்சைக்காரன்’ படத்திற்கும் அவருக்கும் ஒரு சம்பந்தமுண்டு. அதனால் அவரை அப்படி கூப்பிட்டு பழகிவிட்டோம்.
என்னுடைய படம் சிசிடிவி பற்றியதல்ல. பதிவான காட்சிகள் மறைக்கப்பட்டதை பற்றியதுதான் என் படம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளோம். என் படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை…” என்றார்.
இராமானுஜம்