ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை வழக்கில் அவரது உதவியாளர்கள் 2 பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து டிக்டாக் மூலம் பிரபலமான நடிகை சோனாலி போகத் கடந்த ஆகஸ்ட் 22 தேதி கோவா சென்றிருந்தார்.
அப்போது சோனாலி போகத்தின் உதவியாளர்கள் சுதிர் சங்வான், சுக்விந்தர் சிங் அவருடன் சென்றிருந்தனர்.
இந்நிலையில், ஆகஸ்ட் 23 தேதி அவர் தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார். உடனே வடக்கு கோவா மாவட்டத்தில் அஞ்சுனாவில் உள்ள செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால்,
அங்கு சோனாலி போகத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இன்று ஆகஸ்ட் 26 மதியம் சோனாலி போகத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் சோனாலி போகத் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சோனாலி போகத்தின் உதவியாளர்களான சுதிர் சங்வான், சுக்விந்தார் சிங் இருவரும் வலுக்கட்டாயமாக அவருக்கு போதை பொருளை கொடுத்தது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அவரது உதவியாளர்கள் இருவரும் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து கோவா போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் பிஷ்னோய் இன்று (ஆகஸ்ட் 26 ) செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அவரது உதவியாளர்கள் சோனாலி போகத்துக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுத்தது தெரிய வந்தது.
அவருக்கு சில ரசாயனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் அவர் சுய கட்டுப்பாட்டில் இல்லை.
அதிகாலை 4:30 மணியளவில் அவர் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, ஒருவர் அவரை கழிப்பறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இரண்டு மணி நேரம் என்ன செய்தார்கள் என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இந்த மருந்தின் தாக்கத்தில் அவர் இறந்ததாக தெரிகிறது. அவரது உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்று கூறியுள்ளார்.
சோனாலி போகத் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகிய இருவரின் பெயரையும் சோனாலி போகத்தின் சகோதரர் ரிங்கு டாக்கா காவல்துறையில் அளித்த புகாரில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பில்கிஸ் பானு குற்றவாளிகள்: சொந்த ஊரிலிருந்து கிளம்பும் மக்கள்!