சினிமா பிரபலங்கள் ரசிகர்களுடன் தங்களது அடுத்தடுத்த படங்களின் அப்டேட் மட்டுமின்றி அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
இது அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்குகளின் மூலம் பகிரப்பட்டு வரும் அதேவேளையில் ஒரு சிலர் தாங்களாகவே பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி போலியாக கணக்குகளை தொடங்கி அவர்களை பின்தொடர்பவர்களிடம் பணம் பறிப்பது மற்றும் தேவையற்ற கருத்துக்களை பகிர்வது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாடலாசிரியர் மற்றும் கவிஞர் தாமரை பெயரில் தொடங்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்கு இன்று ( அக்டோபர் 10 ) நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பணிச்சுமையால் நான் சமூக வலைதளங்களில் அதிகம் இயங்குவதில்லை. முகநூல் மட்டுமே நான் அதிகமாகப் புழங்கும் தளம்.
ஆனால், இந்த என் இல்லாமையைப் பயன்படுத்தி சிலபல வீணர்கள் என் பெயரில் போலிக் கணக்குகளை உருவாக்கி இயக்கி வந்திருக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, முகநூலில் இருந்த அதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை நீக்கினேன். இன்ஸ்டா மற்றும் ட்விட்டரிலும் போலிகள் இருந்ததால் அவற்றை நீக்கியதுடன், அதற்காகவே என் மெய்யான கணக்குகளைத் தொடங்கினேன். தொடங்கினேனே தவிர அவற்றில் இயங்க முடியவில்லை.

ட்விட்டரில் ஒன்றைப் பதிவதற்குள் போதும் போதுமென்றாகிறது. இன்ஸ்டாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
படங்களோடுதான் பதிவிடவே இயலுமாம். எனவே கணக்குத் துவங்கியது, பதிவிடுவது உள்ளிட்டவற்றை சமரன் (தாமரை மகன்) செய்து வந்தான்.
ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவனிடம் சொல்லி அதைச் செயல்படுத்தி, கண்காணித்து, நடைமுறையில் சரிவரவில்லை.
தற்சமயம் பெருவெற்றி பெற்றுள்ள மல்லிப்பூ பாடலை இன்ஸ்டாவில் பதிய முயன்றேன். ஆனால் அதே பாடலை அங்கே ஆயிரக்கணக்கானோர் பதிவிட்டு மகிழ்ந்துள்ளனர்.
அண்மையில் என் பெயரில் இயங்கி வந்த ஒரு போலிக்கணக்கு ட்விட்டர் என் பார்வைக்கு வந்தது. thamarai writes என்ற பெயரில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை வைத்து என் பதிவுகளைத் திருடி அதில் வெளியிட்டுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நான் பதியாததையும் பதிந்து எனக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தியுள்ளனர்.
ரசிகர்கள் நானென்று நினைத்து அவர்களோடு உரையாடி வந்திருக்கின்றனர். தற்சமயம் சமூக வலைதள விற்பன்னர்களான ஒரு நிறுவனத்திடம் சொல்லி இதற்கொரு தீர்வு கண்டேன்.
போலிக்கணக்கை முடக்கியதோடு எனக்கும் ஆதாரபூர்வமான கணக்கைப் பெற்றுத் தர முயற்சி எடுத்திருக்கிறார்கள்.
என் சமூகதளங்களின் இயக்கத்தை அவர்களிடம் ஒப்படைக்க இருக்கிறேன். பிரபலங்களுக்கு ஒருகட்டத்தில் இது தவிர்க்க முடியாததாகிறது. என் கணக்கை முறையாகப் பதிந்தவுடன் அந்த நிறுவனத்தின் பெயரை அறிவிக்கிறேன்.
என் கவனத்துக்குப் போலிக் கணக்கைக் கொண்டுவந்ததற்குத் தம்பி யோகேந்திரனுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்து, போலியை முடக்கியதற்குத் தம்பி சரவணனுக்கும் என் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நானும் தோனியோட ஊருதான்: சிக்ஸர் மழை பொழிந்த இளம் வீரர்!
தீபாவளி: எந்த ஊருக்கு செல்ல எந்த பேருந்து நிலையம்? இதோ பட்டியல்!