பிரபல மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்(வயது 78) அவரது இல்லத்தில் நெற்றியில் அடிபட்ட நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78). தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், நெற்றியில் காயங்களுடன் இறந்த நிலையில் இன்று கிடந்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் வயதான வாணி ஜெயராம் படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த இவர் 1971 ம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் 1974 ம் ஆண்டு தீர்க்கசுமங்கலி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக வாணி ஜெயராம் பாடிய ’மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்ற பாடலைக் கேட்டு மயங்காதவர்களே இருக்க முடியாது.
மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளை வாணி ஜெயராம் பெற்றுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவரது மறைவு செய்தியறிந்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
இடைத்தேர்தல்: இரட்டை இலைக்கு ஓபிஎஸ் ஆதரவு!
ஒப்புதல் படிவம்: தமிழ் மகன் உசேன் முக்கிய அறிவிப்பு!