தமிழ் சினிமாவில் கடந்த ஐந்து மாதங்களில் 90 நேரடி தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. வாரத்தின் இறுதியில் வெள்ளிக்கிழமைதோறும் புதிய படங்களை திரையரங்குகளின் மூலம் வெளியிடும் பழக்கத்தை கொண்டிருக்கும் திரையுலகில் இந்த வாரம்(9.6.2023) நான்கு படங்கள் வெளியாகிறது.
அந்த வகையில், அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் போர் தொழில். இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர் தொழில் படத்திற்கு போட்டியாக சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் படம், பெல், மற்றும் சமுத்திரகனி, மீரா ஜாஸ்மின் நடிப்பில் விமானம் என நான்கு படங்கள் வெளியாகிறது.
போர் தொழில்
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது படத்தை பற்றி நடிகர் அசோக் செல்வன் கூறுகையில்,
” எனக்கும் மிகவும் பிடித்த திரைக்கதை இது. 2015 ஆம் ஆண்டில்.. இப்படத்தின் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குநர் விக்னேசும் விவாதித்திருக்கிறோம். இயக்குநருடன் கல்லூரி காலகட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும்.. விளம்பர படங்களிலும்.. பணியாற்றிருக்கிறேன்.
இதுவரை ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மர்டர் மிஸ்டரி ஜானரிலான திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை.
சரத்குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.
எனக்கு கிடைத்த அற்புதமான திரைக்கதை இந்த ‘போர் தொழில்’ படம். திரில்லர் ஜானரிலான படத்தை பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த ‘போர் தொழில்’ படம் நிச்சயம் பிடிக்கும்”
இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தை பற்றி பேசுகையில், “நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை.
இந்த திரைப்படம் – புலனாய்வு பாணியிலான திரில்லர் திரைப்படம். பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காமல் இப்படத்தில் திரைக்கதையை அடர்த்தியுடன் உருவாக்கி இருக்கிறோம்.
முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் போது கிடைக்கும் பரவச உணர்வு… ஐந்து நாட்களுக்குப் பிறகு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்
டக்கர்
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘டக்கர்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது .

2019ம் ஆண்டு அருவம் படத்திற்கு பிறகு நடிகர் சித்தார்த் நடிப்பில் தமிழில் எந்த படமும் வெளியாக வில்லை, நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது டக்கர் படம் வெளியாக உள்ளதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
படம் பற்றி இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் கூறியிருப்பதாவது,” ’டக்கர்’ இது என்னுடைய இரண்டாவது படம். இந்தப் படத்திற்கு சித்தார்த் ஏன் என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. ஒரு கதை யோசிக்கும்போதே யாராவது மனதில் வருவார்கள்.
இந்தக் கதையில் லவ், ஆக்ஷன், இளம் தலைமுறையினருக்கான கண்டெண்ட் உள்ளது. இது அனைத்தும் சித்தார்த்திடம் உள்ளதால் அவரை தேர்ந்தெடுத்தேன். திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மிகவும் தைரியமாக இந்த தலைமுறை வெளியே சொல்லத் தயங்கும் பல விஷயங்களை படத்தில் வெளிப்படையாக பேசியுள்ளார். யோகிபாபு அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து பேசிய நடிகர் சித்தார்த்,”’டக்கர்’ பட இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது. எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது.
’டக்கர்’ என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும். இந்தப் படத்தில் ‘டக்கர்’ பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ்தான் அது.
சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்கு பட்டது.
’உங்களை இதுவரை சாஃப்ட்டாகதான் பார்த்திருப்பார்கள். இதில் ரக்கட்டாக பார்த்தால் வித்தியாசமாக இருக்கும்’ என இயக்குநர் சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை எடுத்தோம்.
ஜூன் 9 அன்று இந்தப் படம் ரிலீஸ், ஹிட் என்று சொல்லும் அளவுக்கு இதன் மீது நம்பிக்கை உள்ளது.
‘உடலுறவு வேண்டுமனால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம் வேண்டாம்’ என கதாநாயகி டிரைய்லரில் பேசும் வசனம் அனைவரையும் மிரட்டி போட்டுவிட்டது. யூடியூப் கமெண்டிலேயே இதுதொடர்பாக நிறைய விவாதங்கள்.
இந்த கதாநாயகி கதாநாயகனை சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதும் ‘டக்கர்’ரில் இருக்கும்.
இந்த சம்மரில் வெளியாகும் படங்களில் ‘டக்கர்’ நிச்சயம் தனி இடத்தைப் பிடிக்கும்” என்றார்.
பெல்
பீட்டர் ராஜின் ப்ரோகன் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் புவன் இயக்கத்தில் இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் பழந்தமிழர்களின் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக “பெல்” உருவாகியிருக்கிறது.
இதில் குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார். படத்தை பற்றி குருசோமசுந்தரம் கூறியதாவது,
”பெல் படக் கதையை இயக்குனர் புவன் கூறும்போதே பிடித்தது. ரொம்ப பொடன்ஷியல் உள்ள கதை. எனது கதாபாத்திரம் வித்தியாசமான பார்வை கொண்டது என்பது தெரிந்தது. அதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்த படம் குறித்து இயக்குனர் வெங்கட் புவன் பேசுகையில், “படத்தின் கதை வசனம் எழுதியுள்ள வெயிலோன் எனது நண்பர்.
அவர்தான் பழந்தமிழர் மருத்துவம் பற்றி கூறி அகத்தியர் 6 ரகசிய மருத்துவ குறிப்புகள் இருக்கிறது. அது பலருக்கு தெரியாது. அதை மையமாக வைத்து கதை எடுப்போம் என்றார். அது சொல்ல வேண்டிய விஷயம் என்று எனக்கும் தோன்றியது.
“பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர், பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங் களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச் சொல்லி அதை பாதுகாக்கவும் கட்டளையிட ரகசியங்ளைப் பாதுகாப்பதில் நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடந்த போராட்டமே படத்தின் மையக்கதையாகும்” என்று கூறியுள்ளார்.
விமானம்
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் கே.கே. கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘விமானம்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். சிவபிரசாத் யானலா இயக்கியுள்ளார். மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

விமானத்தில் பறக்க விரும்பும் மகனின் ஆசையை, வறுமையில் இருக்கும் தந்தையால் நிறைவேற்ற முடிந்ததா என்பது கதை.
நான்கு படங்கள் வெளியானாலும் நட்சத்திர அந்தஸ்து அடிப்படையில் போர் தொழில், டக்கர் படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை வழங்கியுள்ளன.
இராமானுஜம்
‘ஆளுநர் கட்சி உறுப்பினர் போல் செயல்படுகிறார்’ – செல்லூர் ராஜூ
’வணிக மின் கட்டண உயர்வும் பொதுமக்களை பாதிக்கும்: ஜெயக்குமார்