பி.ஜி.எஸ். புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘3.6.9.’
இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். நடித்துள்ளார்.
சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – மாரிஸ்வரன், இசை – கார்த்திக் ஹர்ஷா,உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்களில் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில், ஒரேயொரு களத்தில் 24 கேமராக்கள், 150-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450 தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பில் உலக சாதனைக்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் 26.10.2022 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட படக் குழுவினருடன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் பாண்டியராஜன், இயக்குநர் சுப்பிரமணியம் சிவா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இசையமைப்பாளர் தீனா, எழுத்தாளர் அஜயன் பாலா, ‘லோக்கல் சரக்கு’ படத்தின் தயாரிப்பாளர் சாமிநாதன் ராஜேஷ், நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஷரிபா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
கலைப்புலி தாணு இந்த படத்தின் இசைத் தட்டை வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அதை பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து விழாவில் இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசும்போது, “இன்றைய இயக்குநர்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியவர் பாக்யராஜ் சார்தான்.
அவர்தான் தனது படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல பிரிவுகளையும் ஒரு இயக்குநர் கையாள வேண்டும் என்பதை முதன்முதலில் கொண்டு வந்தவர்.
அவருக்கு பின் வரும் இயக்குநர்கள் கதையுடன் வர வேண்டும் என்கிற நெருக்கடியையும் அவர் உருவாக்கினார். அதுதான் இன்றுவரை அது தொடர்கிறது” என்று கூறினார்.
படத்தின் இயக்குநரான சிவ மாதவ் பேசுகையில், “கிட்டத்தட்ட ஒன்பது வருட போராட்டத்திற்கு பிறகு இந்த படம் சாத்தியமானது. இதை ஒரு சாதனைப் படமாக எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் சொன்னபோது எந்த யோசனையும் செய்யாமல் உடனே ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படத்திற்காக ஆடிசன் வைத்தபோது கிட்டத்தட்ட 500 பேர் வரை வந்து சென்றனர். அதில் பல பேர், “இவர்கள் 81 நிமிடங்களில் ஒரு படத்தை எடுக்கப் போகிறார்களாம்.. இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது..?” என்று எங்கள் காதுபடவே பேசிவிட்டு சென்றார்கள்.
ஆனால் இன்று நாங்கள் இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டோம். அவநம்பிக்கையுடன் பேசியவர்கள் இதை வெளியே நின்று வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கதை மீது பாக்யராஜ் சார் மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவரை கதாநாயகனாக தேர்வு செய்வதற்கு இன்னொரு காரணம், என் அப்பாவிற்கு அவரை ரொம்பவே பிடிக்கும். அதனால் இதில் அவர்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய பின்னர் நானும் அவரது உதவி இயக்குனர்களில் ஒருவராக உணர்ந்தேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன.
விஞ்ஞானத்தின் வளர்ச்சிதான் மனிதனின் வளர்ச்சி.. எல்லாவற்றிலும் விஞ்ஞானம் இருக்கிறது. லாரியில் எலுமிச்சை கட்டுவதில்கூட அறிவியல் இருக்கிறது. அந்த விஞ்ஞானம் பற்றிதான் இந்தப் படம் பேசுகிறது..” என்றார்
படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி.எஸ். கூறுகையில், “நான் தயாரித்த முதல் படம் எனக்கு பெரிய அளவில் பயன் தரவில்லை. அதன் பிறகுதான் ஒரு பெரிய படமாக, பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும்.
அந்தப் படம் அனைவரையும் பேச வைக்கும்விதமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த போதுதான் இப்படி ஒரு சாதனை படத்தை எடுக்கும் எண்ணம் உருவானது. இயக்குநர் சிவ மாதவ்விடம் இதை சொன்னபோது சற்றும் தயங்காமல் ஒப்புக் கொண்டார்.
அதேசமயம் படம் ஆரம்பிக்கும் முன்பு அவர் என்னிடம் சொன்ன கதை படமாக எடுக்க துவங்கியபோது கொஞ்சம், கொஞ்சமாக மாறி இருந்தது. ஆனால் அதுவும் முதலில் சொன்னதைவிட நன்றாகவே இருந்தது.81 நிமிடங்களில் எடுக்கும் படம்தானே. குறைந்த பட்ஜெட்டில் எடுத்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் படத்தின் மொத்த பட்ஜெட் இரண்டு நாள் படப்பிடிப்பிலேயே காலியானது. அந்த அளவிற்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது` என்றார்.
இராமானுஜம்
அடுத்தடுத்து வெளியான ரஜினி பட அப்டேட்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்!